நாட்டுக்கு சேவையாற்றவே மக்கள் ஆணையினை கோருகின்றேன் : கோத்தாபய
நாட்டுக்கு சேவையாற்றவே மக்கள் ஆணையினை கோருகின்றேன். தேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி அனைத்து இனத்தவர்களும் சுதந்திரமாக வாழும் சூழலை எம்மால் ஏற்படுத்த முடியும் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
எஹலியகொட பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம் இவ்விரண்டும் ஒரு நாட்டின் அனைத்து துறைசார் முன்னேற்றத்திலும் பாரிய செல்வாக்கு செலுத்துகின்றன. ஆனால் இவ்விரண்டும் இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன.
வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்பி தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டிய சவால் காணப்படுகின்றது.அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியினை சீர்செய்வதற்கான முறையான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவை முறையாக செயற்படுத்தப் படும்.
30 வருட சிவில் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆனால் இன்று மீண்டும் தேசிய பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தினால் மாத்திரமே நாட்டு மக்கள் அனைவரும் அச்சமின்றி வாழ முடியும். அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழும் சூழல் எம்மால் ஏற்படுத்தப்படும்.
கேள்விக்குறியாக்கப்பட்ட தேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி, உட் கட்டமைப்பு அபிவிருத்தியுடன் பாரிய சேவையினை மக்களுக்கு குறுகிய காலத்தில் மேற்கொண்டுள்ளோம். அதன் காரணமாகவே மக்களாணை யினை கோருகின்றோம். ஆகவே நாட்டு மக்கள் அனைவரும் சிறந்த ஆட்சி மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.