Main Menu

நல்லூர் தேர் உற்சவம்: மக்களிடம் அரச அதிபர் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!

தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்திற்கொண்டு நல்லூர் தேர் உற்சவத்திற்கு அடியவர்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாளை மறுதினம் நல்லூர் ஆலய தேர் உற்சவம் நடைபெறவுள்ள நிலையில் தற்போது உள்ள கொரோனா நிலைமையை  கருத்திற்கொண்டு மக்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பாக இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா மிக விமரிசையாக நடைபெற்று வருகின்றது. தேரோட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. தீர்த்தோற்சவம் மறுநாள் 18ஆம் திகதி இடம்பெறவிருக்கின்றது.

இந்த நிலையில் தற்பொழுது பக்தர்கள் அதிகளவில் நல்லூர் கந்தனை தரிசிப்பதற்கு வருகை தருவதனை நாங்கள் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. ஏற்கனவே, சுகாதாரப் பகுதியினர் அதேபோன்று பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவினரும் ஆலய நிர்வாகத்தினரும் சுகாதார அறிவுறுத்தல்களை பக்தர்களுக்கு வழங்கியிருக்கின்றார்கள்.

அந்த அடிப்படையிலே சுகாதார நடைமுறைகளைப் பேணி சமூக இடைவெளியைப் பின்பற்றி பக்தர்கள் சகல உற்சவங்களிலும் கலந்துகொள்வதற்கு ஏற்றவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

நல்லூர் கந்தனுடைய திருவிழா என்றால் இலட்சோப இலட்சம் மக்கள் ஒன்று கூடி நிற்கின்ற இடமாகும். ஆகவே இந்த கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு பக்தர்கள் இந்த சூழ்நிலையை அனுசரித்து செயற்பட வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது.

இவ்வருட நல்லூர் கந்தன் ஆலய திருவிழாவில் சுகாதார நடைமுறைகளை, சமூக இடைவெளியை பின்பற்றி ஆலய உற்சவங்களில் கலந்துகொள்ளுமாறு ஏற்கனவே பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் ஆலயத் தேர் உற்சவத்தினை உலகளாவிய ரீதியில் தொலைக்காட்சி வழியாக வீடுகளில் இருந்தவாறே பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

சமூகத்தில் ஒவ்வொருவருடைய தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு பக்தர்களும் இந்த தடவை நல்லூர் ஆலய தேர் உற்சவத்திற்கு ஒன்றுகூடி ஆலய உற்சவத்தில் கலந்து கொள்ளாது சுகாதார ஏற்பாடுகளுக்கு ஏற்ப அனுசரித்து தங்களுடைய பிரசன்னத்தை குறைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

பகிரவும்...