Main Menu

தைப்பூசத்திற்கு பொது விடுமுறை அளித்தது தமிழக அரசு

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு எதிர்வரும் 28ஆம் திகதி பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், இனிவரும் ஆண்டுகளில் அனைத்து தைப்பூச திருவிழாவையும் பொதுவிடுமுறை பட்டியலில் சேர்க்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்க் கடவுளாகிய முருகப்பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா.

இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தைப்பூசத்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது, இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் தைப்பூசத் திருவிழாவிற்கு பொதுவிடுமுறை அளிப்பது போன்று தமிழ்நாட்டிலும் தைப்பூசத்திருவிழாவிற்கு பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர்.

இக்கோரிக்கையை பரிசீலித்து எதிர்வரும் ஜனவரி 28 ஆம் நாள் அன்று கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை, பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசத்திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் உத்தரவிட்டுள்ளேன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிரவும்...