தீர்வை எட்டுவதற்கு எமது மக்கள் தயாராக உள்ளனர் : ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்பதே எமது எதிர்பார்ப்பு – சுமந்திரன்
இந்த நாட்டின் அனைத்து மக்களினதும் பன்முகத்தன்மையினையும் சமத்துவத்தினையும் அங்கீகரிக்கும் ஒன்றிணைந்த பிரிபடாத, பிரிக்கமுடியாத நாட்டுக்குள் தீர்வொன்றினை எட்டுவதற்கு எமது மக்கள் தயாராகவே உள்ளனர். ஆனால் ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையானது பிரச்சனை உருவாவதற்கு வழி சமைத்து அது ஆயுதப் போராட்டமாக உருவெடுத்து மூன்று தசாப்தங்களாக பல தீமைகளை கொண்டுவருவதற்கு காரணமாக இருந்த தலைவர்களின் பின்னடைவான சிந்தனைக்கு ஒத்த சிந்தனையாக அமைந்துள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் எடுத்துரைத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் மீதான இரு நாட்கள் விவாதத்தின் முதல்நாள் அமர்வில் கலந்துகொண்டு கருத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்
கடந்த ஜனவரி மூன்றாம் திகதி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனமானது கடந்த மூன்று தசாப்தங்களாக ஆட்சிசெய்த அரசாங்கங்களின் பொதுவான திசையிலிருந்து விலகிச் செல்லுகின்ற அறிகுறிகளை கொண்டிருப்பதினால் இது மிக அவதானமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
ஜனாதிபதி கடந்த நவம்பர் 16ஆம் திகதி மிக முக்கியமான வெற்றியை பெற்றுக் கொண்டார். இந்தப் பாரிய வெற்றியில் காணப்படும் பிரச்சினைக்குரிய விடயம் என்னவெனில் பெரும்பான்மையான சிங்கள பௌத்த மக்களை தவிர ஏனைய மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கை வைப்பதற்கு தயாராக இல்லை என்பதாகும். இதை எவ்விதத்திலும் ஜனாதிபதி மீது அவதூறு கொண்டுவரும் நோக்கில் நான் கூறவில்லை. மாறாக தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒன்றிணைந்த நாடாக நாம் இருக்கவேண்டுமென்பதில் கரிசனையாக இருந்தால் இத்தகைய ஒரு முக்கியமான அம்சத்தினை நாம் புறக்கணிக்க முடியாது என்பதனை சுட்டிக்காட்டவே இந்தக் கருத்தினை முன்வைக்கின்றேன்.
ஒரு நாட்டின் செல்வாக்குமிக்க தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்விலே அவரது சொந்த மக்கள் அவரில் நம்பிக்கை வைக்கிறார்களா என்பது முக்கியமானதல்ல. மாறாக ஏனைய மக்கள் அவரில் நம்பிக்கை வைக்க தயாராக உள்ளார்களா என்பதே முக்கியமாகும். துரதிஷ்டவசமாக இது இன்னும் நடைபெறாத ஒன்றாகவே காணப்படுகின்றது.
ஜனாதிபதியின் வெளிப்படுத்தல்
ஜனாதிபதி தனது வெற்றிக்கு பின் வெளியிட்ட இரண்டு கருத்துக்களில் இந்த விடயம் தொடர்பில் தாம் தெளிவான விளக்கத்துடனேயே உள்ளார் என்பதை வெளிப்படுத்தியிருந்தார். ருவன்வெலிசாயவில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி இதனை கூறியிருந்த அதேவேளை மிகத்தெளிவாக தான் முழு நாட்டிற்கும் ஜனாதிபதி என்றும் தனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் தானே ஜனாதிபதி என்பதனையும் சேர்த்தே கூறியிருந்தார்.
எமது நாடானது பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள், சமயங்கள், இனங்கள் என்பவற்றை பிரதிபலிக்கும் பன்முகத்தன்மை கொண்ட மக்களைக் கொண்ட ஒரு நாடு என்பதை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி இந்த இடைவெளியை குறைக்க நடவடிக்கை எடுப்பார் என்பது எமது எதிர்பார்ப்பாகும். இந்த ஒவ்வொரு மக்களின் சமத்துவம் என்பது அவர்களின் எண்ணிக்கையின் பலத்திலே தங்கியிருக்கவில்லை.
ஜனநாயகமானது தப்பிப்பிழைக்கவும் செழிப்படையவும் வேண்டுமேயன்றி வெளிப்படையான பேரினவாதத்தை நோக்கி செல்லாமல் இருக்க வேண்டுமென்றால் இந்த கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஆனால் கவலைக்கிடமாக ஜனவரி மூன்றாம் திகதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் அத்தகைய பின்னடைவான ஒரு நிலைப்பாட்டினை ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
பின்னடைவான சிந்தனை
பிரச்சினை உருவாவதற்கு வழி சமைத்து அது ஆயுதப் போராட்டமாக உருவெடுத்து மூன்று தசாப்தங்களாக பல தீமைகளை கொண்டுவருவதற்கு காரணமாக இருந்த எமது நாட்டின் தலைவர்களின் பின்னடைவான சிந்தனைக்கு ஒத்த சிந்தனையாக அது அமைந்திருந்தது.
எமது கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சி அல்லது சமஷ்டி கட்சி என அறியப்பட்ட கட்சி குடியுரிமை சட்டத்தின் விளைவாக பிறந்த ஒரு கட்சியாகும். இந்திய, பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டமானது முதலாவது பாராளுமன்றத்தில் 7 அங்கத்தவர்களை கொண்டிருந்த கிட்டத்தட்ட 8 இலட்சம் மக்களின் வாக்குரிமையை ரத்து செய்தது.
ஏன் இன அடிப்படையில் கட்சி உருவானது
பெரும்பான்மையினரின் விருப்பம் என்ற பெயரிலேயே ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையை இது பறித்தது. மேலும் அவர்களுடைய குடியுரிமையையும் அது இல்லாமல் செய்தது. சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தின் பேரினவாத செயற்பாடு காரணமாகவே இலங்கை தமிழரசுக் கட்சி எனும் இன அடிப்படையிலான ஒரு கட்சி உருவாவதற்கான தேவை உண்டாகியது என்பதனை இந்த நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
1956 ஆம் ஆண்டு அரச மொழிகள் சட்டமானது சிங்கள மொழியினை மாத்திரம் அரசகரும மொழியாக ஏற்றுக் கொண்டதை அடுத்து இந்த பேரினவாதம் மேலும் புலப்படும் வகையில் உருப்பெற்றதை நாம் கண்டோம். நமது தலைவர்கள் அமைதியான முறையிலே காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட பொழுது தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அது பின்னர் தொடர்ச்சியான படுகொலைகளாக மாறியது. முதலாவது குடியரசு யாப்பு வரையப்பட்ட பொழுது மொழிகள் தொடர்பில் இருந்த அநீதியை திருத்துவதற்கு எமது கட்சி முயற்சி செய்தது. அத்துடன் சமஷ்டி கட்சி பின்வரும் திருத்தங்களை முன்மொழிந்திருந்தது
சிங்களமும் தமிழும் , சட்டங்கள் இயற்றப்படும் மொழிகளாக இருத்தல் வேண்டும் , அரச கரும மொழிகளாக இருத்தல் வேண்டும், நீதிமன்றங்களின் மொழிகளாக இருத்தல் வேண்டும், அனைத்து சட்டங்களும் வெளியிடப்படும் மொழிகளாக இருத்தல் வேண்டும் என்ற காரணிகள் இருந்தன. இந்த மும்மொழிவுகள் அனைத்தும் 88 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டன. இவற்றிக்கு ஆதரவாக 13 வாக்குகள் கிடைத்தன. இந்த திருத்தங்களின் விவாதங்களின் பின்னர் சமஷ்டி கட்சியின் தலைவரான எஸ்.ஜே.வி. செல்வநாயகம் சபையில் உரையாற்றியிருந்தார். அந்த உரையில் முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியல் யாப்பிலே தமிழ் பேசும் மக்களின் மொழி உரிமை திருப்பிதிகரமாக அமையவில்லை என்பதினாலே இந்த சபையின் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடுவது நன்மையளிக்காத விடயமாகும் என்றும் அன்றைய தினம் சபையின் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுகின்ற வேளைக்கு பின்னர் தாம் சபைக்கு சமூகமளிக்க போவதில்லை என்றும் தெரிவித்தார்.
பேரினவாத அரசியல் அமைப்பு
எமது கட்சியின் முயற்சிகள் வீண்போன அதேநேரம் பேரினவாத அரசியலமைப்பு சட்டம் 1972ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது 1978ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு யாப்பு உருவாக்கப்பட்டபோதும் நடைபெற்றது. இதன் பிற்பாடே ஆயுதம் ஏந்தாத தமிழ் மக்கள் பெருவாரியாக கொலைசெய்யப்பட்ட 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை சம்பவங்கள் இடம்பெற்றன.
இதன்போது இந்தியா தனது அலுவலகங்களூடாக இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதற்கமைய இந்திய படைகளை இங்கு அனுப்பி தமிழர்களிற்கு வரலாற்று ரீதியாக நடந்த அநீதிகளை சரி செய்யமுன்வந்தது. 1987ஆம் ஆண்டு நாட்டிலுள்ள மக்களின் பன்முகத்தன்மையினை ஏற்றுக்கொண்டு அரசியலமைப்பினை சீர்திருத்துகின்ற சரியான திசையில் நாடு பயணிக்க ஆரம்பித்தது. எண்ணிக்கையில் குறைவாக உள்ள மக்களும் தமது பிராந்தியங்களில் நிர்வாகத்தினை மேற்கொள்ளக்கூடிய அதிகாரங்களை கொண்ட மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. சிங்கள மொழியோடு கூட தமிழும் அரச கரும மொழியாக அங்கீகரிக்கப்பட்டது.
இந்த ஆரம்ப நடவடிக்கைகள் நாங்கள் விலக்கிவைக்கப்பட்டிருந்த தேசிய நீரோட்டத்தில் மீண்டும் இணைய வழிவகுத்தன. தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன:
ஜனாதிபதி பிரேமதாசாவின் காலத்தில் மங்கள முனசிங்க தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக்குழு, ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் கொண்டு வரப்பட்ட ஆகஸ்ட் 2000 அரசியல் யாப்பு பத்திரம் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் சர்வ கட்சி அங்கத்தவர் குழுவின் நடவடிக்கைகள் போன்றன இவற்றுள் உள்ளடங்கும்.
மஹிந்தவின் உறுதி
தமிழீழ விடுதலைப்புலிகளுடனான இறுதிப் போரின்போது யுத்தம் முடிவடைந்ததும் இந்தியா உட்பட சர்வதேச சமூகத்திற்கு தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை அரசியல் ரீதியாக அதிகாரபரவலாக்கத்தின் ஊடாக தீர்க்கப்படும் என்ற உறுதியை ஜனாதிபதி ராஜபக்சவின் அரசாங்கம் வழங்கியிருந்தது. இந்த உறுதிமொழி குறைந்தது மூன்று தடவை இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. அதிலே 13ஆவது திருத்தும் முழுமையாக அமுல்படுத்தப்பட்டு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை அடையும் நோக்கில் 13ஆவது திருத்தச்சட்டம் மேலும் கட்டியெழுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 13ஆவது திருத்தச்சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் என்பது தேசிய மொழியான தமிழ் மொழியின் முழுமையான அமுலாக்கத்தினையும் உள்ளடக்குகின்றது.
புதிய அரசியல் அமைப்புக்கான முயற்சி
2015ஆம் ஆண்டு சிறிசேன – விக்கிரமசிங்க அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாராளுமன்றத்தினை அரசியல் சாசன சபையாக மாற்றும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உள்ளடங்கலான அனைத்து கட்சிகளின் பங்குபற்றுதலோடு வழிகாட்டல் குழு மற்றும் ஏனைய உப குழுக்கள் இது தொடர்பில் அநேக காரியங்களை முன்னெடுத்து வந்தன.
இந்த நாட்டின் நன்மையை குறிக்கோளாக கொண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வினை காணும் நோக்கில் இந்த நடவடிக்கைகளில் நாம் பூரணமான ஒத்துழைப்பினை வழங்கியிருந்தோம். எமது மக்கள் அனைத்து மக்களினதும் பன்முகத்தன்மையினையையும் சமத்துவத்தினையும் அங்கீகரிக்கும் ஒன்றிணைந்த பிரிபடாத பிரிக்கமுடியாத நாட்டிற்குள் தீர்வொன்றினை எட்ட இன்னமும் தயாராக இருக்கிறார்கள். அதனடிப்படையில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படவேண்டும் என்கின்ற ஜனாதிபதியின் கருத்தோடு நாம் உடன்படுகின்றோம்.
அழிவுக்கு இட்டுச்செல்லும்
சுதந்திரமடைந்ததன் பிற்பாடு எமது சமூகத்தின் பன்முகத்தைமையினை அர்த்தமுள்ளவகையில் அங்கீகரிக்க முடியாமல் இருந்த பின்னணியினை கடந்த 30 வருடங்களில் நாம் எடுத்து வரும் பல்வேறு சாதகமான நடவடிக்கைகளால் மாற்ற முயன்று வருகின்றோம். நாம் இன்னும் பயணிக்க வேண்டியிருக்கின்றது. இந்த நாடு செழிப்படைய வேண்டும் என்றால் நாம் அதே நோக்கில் பயணிக்க வேண்டும். மாறாக அந்த பாதையில் இருந்து விலகும் எத்தகைய நடவடிக்கையும் எம் அனைவரையும் பாரிய அழிவிற்கே இட்டுச் செல்லும்.
இந்த அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படும் அநேகர் சிங்கப்பூரானது எவ்வாறு தம் மக்கள் மத்தியில் தேசிய நல்லிணக்கத்தினையும் செழிப்பினையும் அடைந்துள்ளது என கூறுவதனை அவதானித்துள்ளேன். நாம் விரும்புவதை மாத்திரம் பொறுக்கிக்கொள்ளாமல் இருப்போமானால் சிங்கப்பூர் ஒரு நல்ல உதாரணம். சிங்கப்பூர் நான்கு தேசிய மொழிகளை கொண்ட நாடு. அவர்களின் தேசிய கீதமானது மொத்த சனத்தொகையில் 15 வீதம் மாத்திரம் கொண்ட மலே மக்களின் மொழியில் இசைக்கப்படுகிறது. நவீன சிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்படும் லீ குவான் யூ வின் அறிவுரைக்கு செவிமடுப்பது சாலத்தகுந்தது என கருதுகிறேன்.
“பிரித்தானியாவின் மாதிரி பொதுநலவாய நாடு இலங்கை ஆகும். சுதந்திரத்தினை நோக்கி மிக அவதானமாக தயார்படுத்தப்பட்ட ஒரு நாடாகும். சுதந்திரத்தின் பின்னர் 10 மில்லியனிற்கும் சற்று குறைவான மக்களை கொண்டிருந்த ஒரு நடுத்தரளவிலான நாடாகும். 1948இல் இலங்கை சுதந்திரம் பெற்ற போது சுதந்திரத்தின் பரிணாம வளர்ச்சிக்கு மிக துல்லியமான ஒரு மாதிரியாக அது விளங்கியது.
ஆனால் அது அவ்வாறு செயற்படவில்லை ஒரு வளமிக்க நாடு வீணாகபோய்க்கொண்டிருப்பதனை எனது விஜயங்களின் போது நான் கண்டேன்.
ஒருமனிதனின் ஒரு வாக்கினால் ஒரு அடிப்படை பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. 8 மில்லியன் சிங்கள மக்கள் 2 மில்லியன் தமிழ் மக்களை தேசிய மொழியான ஆங்கிலத்திலிருந்து சிங்களத்திற்கு மாறும்படிக்கு வாக்குகளினாலே தோற்க்கடித்தார்கள். இது தமிழ் மக்களிற்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. எந்தவொரு அரச மதமும் இல்லாமல் இருந்த ஒரு நாட்டிலே சிங்களவர்கள் பௌத்த மதத்தினை தேசிய மதமாக மாற்றினார்கள். இதனால் தமிழர்களும் இந்துக்களும் நிராகரிக்கப்பட்டதனை உணர்ந்தார்கள்”. என்றார்.