Main Menu

திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்யக் கூடாது – விஜயகாந்த் கண்டனம்

திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர் என்றும் அவரை வைத்து அரசியல் செய்வதை வன்மையாகக் கண்டிப்பதாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று (புதன்கிழமை) விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழுக்கும், தமிழர்களுக்கும் பொதுவான திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வது கண்டனத்துக்குரியது.

சாதி, மதங்கள் மற்றும் தலைவர்களின் சிலைகளை வைத்து அரசியல் செய்தது போக, திருவள்ளுவர் சிலையை வைத்து அதன் மூலம் அரசியல் செய்வதை நிச்சயமாக யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

திருவள்ளுவர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர். அவரை வைத்து அரசியல் செய்வதை எந்தக் கட்சியாக இருந்தாலும் தவிர்க்க வேண்டும். இது தேவையில்லாத பல மோதல்களையும், சட்டம் – ஒழுங்கு பிரச்சினையையும் ஏற்படுத்தக் காரணமாக அமைந்துவிடும்.

அதனால், தமிழக அரசு உடனடியாக இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்தி, இதுபோன்ற நிகழ்வுகள் மேலும் தொடராத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்” என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...