Main Menu

திருக்கேதீஸ்வரத்தில் மட்டுப் படுத்தப்பட்ட பக்தர்களுடன் மகா சிவராத்திரி விழா!

மன்னார், திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி வழாவில் ஒருநேரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு பக்தர்கள் தரிசனம் பெறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ கருணாநந்த குருக்கள் தெரிவித்துள்ளார்.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மேல் தலைமையில் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் போது போக்குவரத்து, சுகாதாரம், மருத்துவம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இதில், அழைக்கப்பட்ட திணைக்களத் தலைவர்கள், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினர், தொண்டர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ஆலயத்தின் பிரதம குரு, “திருக்கேதீஸ்வர ஆலயத்தின் இவ்வருடத்திற்கான மகா சிவராத்திரி நிகழ்வுகள் எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்த இன்றை கலந்துரையாடலில் சிவராத்திரி நிகழ்வின் போது பின்பற்ற வேண்டிய பல்வேறு விடங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

அதற்கமைவாக, வெளி மாவட்டங்களில் இருந்து மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு பக்தர்கள் வருகை தருவதை இயன்றளவிற்குக் குறைத்துக் கொள்வதுடன், உங்கள் வீடுகளிலும், அயலில் உள்ள ஆலயங்களுக்குச் சென்றும் சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்குமாறு வேண்டுகின்றோம்.

மன்னார் மாவட்டத்தில் இருந்து மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்கள், ஏ-32 பிரதான பாதை ஊடான ஆலய வீதியூடாக, அதாவது ஒரு வழிப் பாதையூடாக ஆலயத்துக்கு வருகைதந்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வழிபாடுகளில் கலந்துகொள்ள முடியும்.

ஒரேநேரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு அடியவர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். எனவே அடுத்து வருகின்ற அடியவர்கள் தரிசிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கவேண்டும்.

அனைவரும் நான்கு சாமப் பூசைகளிலும் கலந்துகொள்வதை இயன்றளவிற்குத் தவிர்த்து நீங்களாகவே ஒவ்வொரு பூசைகளிலும் தரிசித்த பின்பு வெளியேற வேண்டும்.

சுகாதார நடைமுறை காரணமாக பாலாவியில் இருந்து தீர்த்தக் காவடி எடுக்கின்ற நடைமுறை முற்றுமுழுதாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், நான்கு சாமப் பூஜைகளுடன் அன்றைய தினத்தில், சிவாச்சாரியர்களினால் தீர்த்தக் காவடியானது மகாலிங்கப் பெருமானுக்கு நடத்தப்படும். இதன்போது, பக்தர்கள் மகாலிங்க பெருமானைத் தரிசித்து வேண்டுதல்களை முன்வைக்கலாம்.

இதேவேளை, அனைவரும் சுகாதார நடைமுறைகளைப் கடைப்பிடித்து, அனைவரும் நோயற்ற வாழ்வு வாழவும் உலகிலிருந்து விரைவில் கொடிய வகை நோய் இல்லாதொழியவும் பிரார்த்திக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...