Main Menu

தலைவர்களின் சிறை தண்டனைக்கு எதிர்ப்பு – கேட்டலோனியா போராட்டத்தில் பெரும் வன்முறை

தலைவர்களின் சிறை தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேட்டலோனியாவின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது.

ஸ்பெயின் நாட்டில் உள்ள தன்னாட்சி பெற்ற மாகாணம் கேட்டலோனியா. கடந்த 2010-ம் ஆண்டு ஸ்பெயினின் அரசியல் சாசன கோர்ட்டு கேட்டலோனியாவின் தன்னாட்சி தொடர்பான சில சட்டப் பிரிவுகளை நீக்கியதால், விடுதலை போராட்டங்கள் தொடங்கின. கேட்டலோனியாவின் வரலாற்றையும், தனித்தன்மையையும் போற்றும் வகையில் அதை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.

இதையடுத்து விடுதலை தொடர்பான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் கேட்டலோனியா நாடாளுமன்றத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இதை வலியுறுத்தி பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது.

அதில் கேட்டலோனியா மந்திரிகள் உள்ளிட்ட 9 பேருக்கு, 9 முதல் 13 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து ஸ்பெயின் சுப்ரீம் கோர்ட்டு அண்மையில் தீர்ப்பளித்தது. இதனை கண்டித்து கேட்டலோனியா மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கேட்டலோனியாவின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. சாலையில் குவிந்த நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், சாலையில் நின்றுகொண்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

மேலும் போராட்டத்தை ஒடுக்கிய, போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி எறிந்தனர். இதனால் பெரும் பரபரப்பு உருவானது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு தடியடியும் நடத்தினர். இதனால் பார்சிலோனா நகர் முழுவதுமே போர்க்களமாக காட்சியளித்தது.

பகிரவும்...