தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு எண்ணிக்கை 26ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவில் இருந்து சேலத்துக்கு வந்த இஸ்லாமிய மதபோதகர்கள் 11 பேர், அவர்களுக்கு வழிகாட்டியாக வந்த சென்னையைச் சேர்ந்த ஒருவர், சேலத்தைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 16 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இதில் இந்தோனேசியர்கள் 4 பேர், சென்னையைச் சேர்ந்த வழிகாட்டி ஒருவர் என 5 பேருக்குக் கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்துத் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதாக நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட 3 பேரும் சென்னை, பெருந்துறை மற்றும் வாலாஜா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் 28வயது இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது