Main Menu

தனது 45-வது பிறந்த நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற உதயநிதி

தி.மு.க. இளைஞரணி செயலாளரான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தனது 45-வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். இதையொட்டி இன்று காலையில் எழுந்ததும் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் தனது தந்தையும், தி.மு.க. தலைவருமான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தாயார் துர்கா ஸ்டாலின் ஆகியோரிடம் காலை தொட்டு ஆசி பெற்றார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலின் பொன்னாடை அணிவித்தார். பதிலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உதயநிதிக்கு பட்டு வேஷ்டியை சால்வையாக அணிவித்தார். பின்னர் உதயநிதியின் தோளை தட்டிக் கொடுத்து உச்சி முகர்ந்தார். அதன் பிறகு உதயநிதியின் தோளில் கைபோட்டு அருகே அரவணைத்து வாழ்த்தினார். அப்போது அருகில் தயாநிதிமாறன் எம்.பி., அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்தனர். அங்கிருந்த உறவினர்களும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ஆவடி நாசர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், தலைமைக் கழக செயலாளர்கள் பூச்சி எஸ்.முருகன், துறைமுகம் காஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். அதன்பிறகு உதயநிதி ஸ்டாலின் மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, பி.கே.சேகர்பாபு, வெள்ளக்கோவில் சாமிநாதன், பெரிய கருப்பன், மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு, இளைஞரணி துணை செயலாளர் தூத்துக்குடி ஜோயல், சேப்பாக்கம் பகுதி செயலாளர் மதன் மோகன், பகுதி பொருளாளர் வி.பி.சிதம்பரம், புழல் நாராயணன், கலைஞரின் உதவியாளர் நித்யா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் பல்லாவரம் மு.ரஞ்சன், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் அங்கு திரண்டிருந்தனர். அவர்களும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதன்பிறகு அண்ணா நினைவிடத்துக்கு சென்று உதயநிதி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார். அதன்பிறகு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கும் சென்று அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சேப்பாக்கம் தொகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் உதயநிதி பங்கேற்று பொது மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார். பின்னர் தி.மு.க. இளைஞரணியின் தலைமை அலுவலகமான அன்பகத்திற்கு சென்று நிர்வாகிகளிடம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் பெற்றார். சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த இளைஞரணியினர் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் திரளாக வந்து உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். சால்வை, மாலைகள் அணிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கட்சி நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர். 1 மாதம் அளவுக்கு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். உதயநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு குரோம்பேட்டை பஸ் நிலையம் அருகில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர்-மாவட்ட துணை செயலாளர் பல்லாவரம் இ.கருணாநிதி ஏற்பாட்டில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஏழை தாய்மார்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இன்று சாப்பாடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. பிரபாகர் ராஜா, தி.நகர் எம்.எல்.ஏ. ஜெ.கருணாநிதி, படப்பை தெற்கு ஒன்றிய செயலாளர் படப்பை ஆ.மனோகரன் ஆகியோரும் இன்று காலையில் உணவு வழங்கி நலத்திட்ட உதவி வழங்கினார்கள். இதேபோல் தமிழ்நாடு முழுவதும் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, மருத்துவ முகாம், விளையாட்டு போட்டிகள், பேச்சுப் போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஒவ்வொரு பகுதியிலும் இளைஞரணியினர் கொடியேற்றி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

பகிரவும்...