Main Menu

தடையை மீறி பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற குஷ்பு கைது

நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவனைக் கண்டித்து பா.ஜ.க. சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற குஷ்புவை பொலிஸார் கைது செய்தனர்.

பெண்களுக்கு எதிராக திருமாவளவன் பேசியதாக பா.ஜ.க.வினர் மாநில அளவில் பல்வேறு போராட்டங்களை செய்து வருகின்றனர்.

அதற்கமைய கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவனைக் கண்டித்து இன்று (செவ்வாய்க்கிழமை) பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு, சசிகலா புஷ்பா, ராகவன் உள்ளிட்ட பா.ஜ.க.வின் நிர்வாகிகள் கலந்துகொள்ளவிருந்தனர். எனினும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸ் தடை விதித்தது.

இதேநேரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் மீது தொடர்ந்து அவதூறு பரப்புவோர் மீது சிதம்பரம் உதவி ஆட்சியாளர் அலுவலகம் முன்பாக மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவனைக் கண்டித்து சிதம்பரத்தில் பா.ஜ.க. நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க தடையை மீறிச் சென்ற குஷ்புவை பொலிஸார் முட்டுக்காடு அருகே கைது செய்தனர்.

பகிரவும்...