Main Menu

ஜெய்பீம் படத்தால் வன்னியர்கள் வேதனை – நடிகர் சூர்யாவுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்

ஜெய்பீம் திரைப்படத்தின் வில்லன்கள் செய்த பாவத்தை விட, அந்தப் படக்குழுவினர் செய்துள்ள பாவம் மிகவும் கொடியது என அன்புமணி ராம்தாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தங்களின் தயாரிப்பில், தங்களைக் கதாநாயகனாகக் கொண்டு இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வெளிவந்துள்ள ‘ஜெய்பீம்’ என்ற தலைப்பிலான திரைப்படம் தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்கள் மத்தியில் வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் வன்னியர் சமுதாயம் எந்த அளவுக்கு திட்டமிட்டு இழிவு படுத்தப்பட்டு இருக்கிறது என்பது குறித்து ஆயிரக்கணக்கான மக்களும், இளைஞர்களும் என்னிடம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இதே உணர்வும், மன நிலையும் மேலோங்கியுள்ள நிலையில், தங்களிடமிருந்து அறமற்ற அமைதி மட்டுமே வெளிவந்து கொண்டிருப்பதால் தான் தங்களுக்கு இக்கடிதத்தை நான் எழுத வேண்டியிருக்கிறது.

அடக்குமுறையார் மீது கட்டவிழ்க்கப்பட்டாலும், அவை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.

‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் கொடூர மனநிலையும், மனித உரிமையைக் காலில் போட்டு மிதிக்கும் போக்கும் கொண்ட காவல்துறை சார்பு ஆய்வாளரின் வீட்டில், உண்மையிலேயே அவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும் கூட, அவரை வன்னியர் என்று காட்டும் வன்மத்துடன் அக்னிக் கலசத்துடன் கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி இடம்பெற்றுள்ளது.

உண்மையான நிகழ்வில் ராஜாக்கண்ணு என்ற பழங்குடியினரை கொலை செய்த காவல் சார்பு ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி என்பது பலரும் அறிந்த உண்மை எனும் நிலையில், அந்த பாத்திரத்திற்கு குருமூர்த்தி என்று பெயர் சூட்டி, வன்னியர் சங்கத்தின் மறைந்த தலைவர் ஜெ.குருவை நினைவுபடுத்தும் வகையில் குரு என்று அழைப்பது ஆகியவையும், இந்த அநீதிகளுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சில காட்சிகளும் தான் தமிழ்நாட்டில் வாழும் மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளன. இந்தக் காட்சிகள் கண்டிக்கத்தக்கவை.

ஜெய்பீம் திரைப்படம் உங்களை புனிதராகக் காட்டும் நோக்குடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்தப் படத்தை உருவாக்கியவர்களுக்கு எதிராக பொதுமக்களும், இளைஞர்களும் கொந்தளித்த பிறகும், படக்குழுவினரின் தவறுகளை நடுநிலையாளர்கள் சுட்டிக்காட்டிய பிறகும் கூட, தங்களின் தவறுகளை ஒப்புக் கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது.

ஜெய்பீம் திரைப்படத்தின் வில்லன்கள் செய்த பாவத்தை விட, அந்தப் படக்குழுவினர் செய்துள்ள பாவம் மிகவும் கொடியது. இவை அனைத்தையும் தெரிந்து கொண்டு ஒரு வாரமாக நீங்கள் கடைபிடித்து வரும் அமைதி ஆபத்தானது.

படைப்பாளிகளை விட அவர்களுக்கு வாழ்க்கை அளிக்கும் ரசிகர்கள் தான் பெரியவர்கள். இந்தப் படத்தில் நீங்கள் உங்களின் வன்மத்தைக் காட்டினால், அடுத்து உங்களின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் போது அவர்கள் தங்களின் கோபத்தைக் காட்டக்கூடும். இவை எதுவுமே தேவையில்லை.

கலைக்கும், உங்களின் படைப்புக்கும் நீங்கள் நேர்மையானவராக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால், உங்களை நோக்கி மேலே எழுப்பப்பட்டுள்ள வினாக்களுக்கு நீங்கள் விடை அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். அது தான் மக்களின் கோபத்தை தணிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பகிரவும்...