Main Menu

ஜெயலலிதாவின் மரணம் குறித்து நேர்மையான விசாரணை நடத்துவோம்- மு.க.ஸ்டாலின்

பாரதிய ஜனதாவின் கிளைக்கழகமாக அ.தி.மு.க. செயல்படுகிறது என தக்கலையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் பேசினார்.

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் இன்று குமரி மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

இதற்காக அவர் நேற்றிரவு விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றார். அங்கிருந்து கார் மூலம் இன்று காலை குமரி மாவட்டம் வந்தார். மாவட்ட எல்லையில் அவருக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அவர் அங்கிருந்து குமரி மேற்கு மாவட்டத்தில் பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட தக்கலை பகுதிக்கு வந்தார். அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

“கலைஞரின் அன்பு உடன்பிறப்புக்களே. ஏப்ரல் 6ம் தேதி நடக்க உள்ள சட்டமன்றத்தின் பொதுத்தேர்தலில் சிறப்பான வெற்றியை நீங்கள் தேடித்தரவேண்டும்.

வெற்றி வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வந்துள்ளேன். நீங்க வெற்றிபெற வச்சிருவீங்க இல்லியா. அந்த நம்பிக்கையோடு நான் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். பத்மநாபபுரம் தொகுதியில் தி.மு.க அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் மனோ தங்கராஜுக்கு உதயசூரியன் சின்னத்திலும், விளவங்கோட்டில் விஜயதரணிக்கு கைச்சின்னத்திலும், கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமாருக்கு கைச்சின்னத்திலும், குளச்சல் தொகுதியில் போட்டியிட இருக்கும் பிரின்சுக்கு கைச்சின்னத்திலும், கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் விஜய்வசந்துக்கு கைச்சின்னத்தில் ஆதரவு தந்து சிறப்பான வெற்றியை தர கேட்டுக்கொள்கிறேன்.

கலைஞர் தனது 13-வது வயதில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, மாணவர்களை ஒன்று திரட்டி தாய் மொழியாம் தமிழை காக்க, இந்தி திணிக்கக்கூடாது என திருவாரூரில் தமிழ் வாழ்க, இந்தி ஒழிக என பதாகை ஏந்தி, மறு கையில் புலி, வில், கயல் கொடி ஏந்திய கலைஞர் மகன் நான். 133 அடி உயரத்தில் வள்ளுவருக்கு சிலை அமைத்த கலைஞரின் மகனாக வந்திருக்கிறேன். தென் எல்லை போராட்ட தியாகிகளுக்கு உதவித் தொகை வழங்கிய தி.மு.கவிற்குத்தான் குமரி மாவட்ட மக்களின் ஆதரவு.

குமரி மாவட்டத்தில் எப்பொழுதுமே தி.மு.க கூட்டணிதான் வெற்றிபெற்றுள்ளது என்பது வரலாறு. வேறு எந்த மாவட்டத்துக்கும் இல்லாத வரலாறு இந்த மாவட்டத்துக்கு உண்டு. அந்த வரலாறு தொடர வேண்டும். கழக ஆட்சியில் கலைஞர் ஐந்து முறை முதலமைச்சராக இருந்தபோது குமரிக்கு எத்தனையோ சாதனைகளை படைத்திருக்கிறார். நான் தேர்தலுக்கு மட்டும் வந்துபோகிறேன் என நினைத்துவிடக்கூடாது.

எந்த சூழ்நிலையிலும் மக்களோடு நாங்கள் இருக்கிறோம். கலைஞரின் சாதனைகளை தலைப்புச் செய்தியாக நினைவு படுத்த விரும்புகிறேன். வள்ளுவருக்கு 133 அடி உயர சிலை, காமராஜருக்கு மணிமண்டபம், ஜீவாவுக்கு மணிமண்டபம், பொய்கை, மாம்பழத்துறை அணை, குளச்சல் தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகங்கள், பத்மநாபபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் எல்லாம் தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள்.

14 வயதில் சாதாரண உறுப்பினராக தி.மு.கவில் இணைத்துக்கொண்டு கோபாலபுரத்தில் வட்ட பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னை மாநகர உறுப்பினராக, பொதுக்குழு உறுப்பினராக, செயற்குழு உறுப்பினராக, இளைஞரணி தலைவராக, பொருளாளராக, செயல் தலைவராக, கலைஞர் மறைவிற்கு பிறகு தலைவராக வந்திருக்கிறேன். சென்னையில் இரண்டுமுறை மேயராக, உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதலமைச்சராக, இப்ப எதிர்கட்சி தலைவராக உள்ளேன்.

இந்த வேட்பாளர்களுக்கு ஓட்டு கேட்ட நானும் ஒரு வேட்பாளர்தான். நான் முதலமைச்சர் வேட்பாளர். இவர்கள் வெற்றிபெற்றால்தான் நான் முதலமைச்சர் ஆக முடியும். ஆட்சி நடத்தும் பழனிசாமி பத்து வருடமாக நாம் ஆட்சியில் இருக்கிறோம் என்று நினைத்து விட்டு நம்மைப்பார்த்து கேள்வி கேட்கிறார்.

பத்து வருடம் மத்திய அரசில் அங்கம் வகித்தீர்களே என்ன செய்தீர்கள் என நம்மிடம் கேட்கிறார். நான் கேட்கிறேன் பத்து வரு‌ஷமா நீங்க என்ன செய்தீங்க. நான் பொத்தாம்பொதுவா கேட்கமாட்டேன், நான் கலைஞரின் மகன்.

எடப்பாடி பழனிசாமி

முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறையில் 4000 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டிருக்கிறது. சம்பந்தயின் சம்பந்திக்கு டெண்டர் விட்டிருக்கிறார்கள். திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர். எஸ்.பாரதி வழக்கு போட்டார். இதை சி.பி.ஐ.தான் விசாரிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. தெம்பிருந்தால், துணிவிருந்தால், திராணி இருந்தால் அந்த வழக்கை சந்தித்திருக்க வேண்டும். அப்படி சந்தித்திருந்தால் இப்பொழுது சிறையில்தான் இருந்திருக்க வேண்டும். முதல்வராக இருக்க முடியாது. உச்சநீதிமன்றம் போய் தடை வாங்கினார். ஆட்சி மாற்றம் வரத்தான் போகிறது. வந்த பிறகு உள்ளதான் இருக்கப்போகிறார்.

சம்பந்திக்கு டெண்டர் கொடுத்தாரா? இல்லையா என்பதற்கு பதில் சொல்லட்டும். ஊர் ஊராக போய் பேசும் பழனிசாமி பதில் சொல்ல வேண்டும். உலக வங்கி நிதியில் உறவினர்களுக்கு டெண்டர் கொடுக்கக்கூடாது என விதி இருக்கிறது. இதுபற்றி நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. இதற்கு என்ன பதில்.

ராமலிங்கம் வீட்டில் ரெய்டு நடத்தியபிறகுதான் மோடி அரசின் பாதம் தாங்கிய பழனிசாமியாக மாறிவிட்டார்.

பாஜகவின் கிளை கழகமாக அதிமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது. உறவினர்கள் சொத்து குவித்து வைத்துள்ளது குறித்து நீதிமன்றத்தில் வழக்கும், ஆளுநரிடத்தில் புகாரும் கொடுத்திருக்கிறோம். நடவடிக்கை எடுக்கமாட்டார் என தெரியும் ஆனால் முறைப்படி கொடுத்தோம்.

மே 2 வாக்கு எண்ணிய மறுநாள் நாம் ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும். நமெக்கென்று இருக்கும் உரிமைகள் மோடி இடத்தில் அடமானம் வைக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா 2016 ஜூன் 16-ல் மோடிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்த கடிதத்தில் மிகத்தெளிவாக ஜி.எஸ்.டி சட்டத்தை ஆதரிக்க முடியாது, உதய் திட்டத்தையும், நீட் தேர்வையும், உணவு பாதுகாப்பு சட்டத்தையும் ஆதரிக்க முடியாது என்றார். செப்டம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்புறம் என்ன நடந்தது என உங்களுக்கு தெரியும். ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி விசாரணை கமி‌ஷன் கடந்த நான்கு ஆண்டுகளாக பெயருக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.

இதுவரை எந்த உண்மையும் வெளிவரவில்லை. உறவினர், நண்பர்கள் இறந்தால் துக்கம் விசாரிக்கிறோம். அவர்கள் அதற்கான காரணத்தை சொல்லுவார்கள். கொள்கையில், லட்சியத்தில் வேறுபாடு இருக்கலாம்.

ஆனால் நமக்கும் அவர்தான் முதலமைச்சர். தேர்தல் அறிக்கை திட்டங்களை நிறைவேற்றுவது ஒருபுறம் இருந்தாலும். ஜெயலலிதா மரணம் குறித்து கண்டுபிடித்து அடையாளம் காட்டுவோம். மோடியை கடுமையாக எதிர்த்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் லட்சியத்தை அவர்கள் காப்பாற்றவில்லை.

இப்போது சிறுபான்மை மக்களுக்கு வக்காலத்து வாங்குவதுபோல நாடகம் ஆடுகிறார். காஷ்மீர், முத்தலாக், குடியுரிமை திருத்த சட்டம் என எல்லாவற்றுக்கும் ஆதரவு கொடுத்தார்கள். ஒரு அ.தி.மு.க. எம்.பி ஜெயித்தாலும் அது பி.ஜே.பி. எம்.பிதான். அ.தி.மு.க.வும் பிஜேபியும் ஜெயிக்கக்கூடாது. மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து 2 கோடி கையெழுத்து வாங்கி அனுப்பிவைத்தோம். இப்போது குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய நடவடிகை எடுப்போம் என மக்களை ஏமாற்றுகிறார்கள். கதாநாயகன் மட்டுமல்ல கதாநாயகியும் நாம்தான்.

சொன்னதை செய்வோம், சொல்வதை செய்வோம் என கலைஞர் சொல்லுவார். மீனவ மக்களை கடல்சார் பழங்குடியினர் என பழங்குடியின இனத்தில் சேர்க்க நடவடிக்கை, தேசிய மீனவர் ஆணையம், தடைக்கால நிவாரணம் ரூ.8 ஆயிரம், மழைக்கால நிவாரணம் ரூ. 6 ஆயிரமாக உயர்த்தப்படும்.

டீசல் மானியம் ரூ.2000 ஆக உயர்த்தப்படும். கட்டுமரம், பைபர் படகுகளுக்கு மானியம், உள்நாட்டு மீனவர்கள் பரிசல் வாங்க 50 சதவீத மானியம், மானியவிலையில் ஐஸ்பெட்டிகள் மீன் வியாபாரம் செய்யும் பெண்களுக்கும் வழங்கப்படும்.

சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, உள்ளாட்சியில் 33 சதவீத இட ஒதுக்கீடு, ஆரம்ப பள்ளியில் பெண் ஆசிரியர் நியமிக்க சட்டம், தமிழகத்தில் திருமண உதவித்திட்டம் நாங்கள் கொண்டுவந்தோம். குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக 1000 ரூபாய், அரசு வேலையில் 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் பெண்களுக்கு முன்னுரிமை, பெட்ரோல் 5 ரூபாய், டீசல் 4 ரூபாய், பால்விலை 3 ரூபாய் குறைக்கப்படும்.

மாணவர்கள் இளைஞர் நலனுக்காக கல்விக்கடனை ரத்து செய்வோம். அரசு பணியிடத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள். நீர் நிலைகளை பாதுகாக்க 75 ஆயிரம், சாலை பராமரிப்புக்கு 75 ஆயிரம் இளைஞர்கள், அறநிலையத்துறை பாதுகாப்பில், 25 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

நாடு முழுவதும் கொரோனா வருகிறது. தமிழகத்திலும் நுழையும் அபாயம் உயிருக்கு ஆபத்து என நாங்கள் எச்சரித்தோம். அம்மா ஆட்சியில் கொரோனா வராது, ஒரு உயிர்கூட போகாது என்றார். துரைமுருகன் மாஸ்க் கேட்டார். கிடையாது என்ற பழனிசாமி மறுநாள் மாஸ்க் போட்டுகிட்டு வந்தார்.

கொரோனா நிதியாக மக்களுக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்கச் சொன்னோம். ஆனால் ரூ.1000 ரூபாய் கொடுத்தார்கள். நாங்கள் மே 2 வருவோம், ஜூன் 3 தலைவர் பிறந்த நாள் அன்று மீதமுள்ள ரூ.4000 ரூபாய் வழங்கப்படும்.

குமரியில் அய்யா வைகுண்ட சாமி ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். தி.மு.க. ஆட்சியில் காட்டுப்பள்ளி துறைமுகம் அமைக்கப்படாது. கன்னியாகுமரி சரக்கு பெட்டக துறைமுகத்தை அனுமதிக்க மாட்டோம். விவசாயிகளும், மீனவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் தி.மு.க. இந்த திட்டத்தை வர விடாது, நெய்யாறு இடதுகரை சானல் தூர்வாரப்படும். ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.

இது காமராஜர் பிறந்த மண். மோடி மஸ்தான் வேலைகள் இங்கு பலிக்காது. தமிழகத்தை டெல்லியில் உள்ளவர்கள்தான் ஆண்டு கொண்டிருக்கிறார்கள். ஆட்சிக்கு வர வேண்டும் என்று தேர்தலில் போட்டியிடவில்லை. மதவெறியை தூண்டி நாட்டை குட்டிச்சுவராக்க மோடியும், அமித்ஷாவும் நினைக்கிறார்கள்.

இது திராவிட மண். தமிழகத்தில் அவர்கள் நுழைய முடியாது. மாநில உரிமைகளை பாதுகாக்க, வேலை வாய்ப்புகளை உருவாக்கிட, குமரிமுனையை முழுமையா குமரியாக மாற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரியுங்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் கொரோனாவில் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவர் காங்கிரஸ் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியவர். அவரது இடத்தை நிரப்ப அவரது மகன் விஜய் வசந்த் வந்திருக்கிறார். அவருக்கு கைச்சின்னத்தில் வாக்களியுங்கள். கலைஞரின் மகனாக உங்களிடம் வாக்கு கேட்கிறேன். மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை வெற்றிப்பெற செய்யுங்கள்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

பகிரவும்...