ஜவகர்லால் நேரு பிறந்தநாள்: பிரதமர் மற்றும் ராகுல் உள்ளிட்ட பல தலைவர்கள் மரியாதை
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்களினால் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.
இதேபோன்று, ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், “நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்” என பதிவேற்றியுள்ளார்.
இதேவேளை, காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மற்றும் தொண்டர்கள் நேருவுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக புகழாரம் சூட்டி உள்ளனர். அவரது முக்கியமான புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.