Main Menu

ஜப்பான் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான பதக்கங்கள் வெளியீடு!

ஜப்பானில் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், கோடைகால பரா ஒலிம்பிக் போட்டிகளுக்கான விளையாட்டு அரங்குகளின் நிர்மாணப் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கான பதக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

2020ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் திகதி ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகும் நிலையில், மிகச் சரியாக அதற்கு ஓராண்டு உள்ளதை குறிப்பிடும் வகையில் இந்த ஆண்டு ஜூலை 24ஆம் திகதி அந்த பதக்கங்கள் வெளியிடப்பட்டன.

556 முதல் 450 கிராம் எடையில் இருக்கும் இந்தத் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் செல்லிடப்பேசி உள்ளிட்ட பழைய எலக்ட்ரானிக் பொருள்களை மறுசுழற்சி செய்து அதிலிருந்து செய்யப்பட்டவையாகும்.

அந்தப் பதக்கங்களில் வெற்றிக்குரிய கிரேக்க பெண் கடவுளான நைக்-இன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தப் பதக்கங்களை வடிவமைப்பதற்காக போட்டி நடத்தப்பட்டது. மொத்தமாக கிடைக்கப்பெற்ற 400 வடிவங்களில், இறுதியாக ஜுனிச்சி கவானிச்சி என்பவர் அளித்த வடிவமே இறுதி செய்யப்பட்டு, பதக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக மொத்தம் 5,000 பதக்கங்கள் தயாரிக்கப்படவுள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசின் பெருமளவான நிதியினால் கடந்த இரண்டு வருடங்களாக உருவாக்கப்பட்டு வரும் பிரமாண்ட விளையாட்டு அரங்குகளின் 80 சதவீதமான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரங்கங்கள் பெரும்பாலும் நவம்பர் மாதத்துக்கு முன்னதாக, முழுமையாக பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

குறித்த கோடைக்கால ஒலிம்பிக் தொடரில், வெப்பத்தை கட்டுப்படுத்தும் வகையில் அரங்கத்தின் கூரைகள் மரத்தில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பார்வையாளர்கள் மற்றும் வீரர்களை குளிர்சியாக வைத்திருக்க முடியுமென வடிவமைப்பாளர்கள் நம்புகின்றனர்.

குறித்த கோடைக்கால ஒலிப்பிக் தொடரில், பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, முகத்தின் மூலம் ஒருவரை அடையாளம் காணும் முறைமையை போட்டி அமைப்பாளர்கள் அறிமுகப்படுத்தவுள்ளனர்.

கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், எதிர்வரும், 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் திகதி முதல் ஒகஸ்ட் மாதம் 9ஆம் திகதி வரை, ஜப்பானின் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

206 நாடுகள் பங்கேற்கும் இத்தொடரில், 33 விளையாட்டுகளில் இருந்து 339 விiளாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த தொடரில் 11,091 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தோடு, இந்த ஒலிம்பிக் போட்டிகளில், அண்மையில் வெளிவந்த தகவலின்படி, பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், கோடைக்கால ஒலிம்பிக் தொடரில், 7 புதிய விளையாட்டுக்கள் அறிமுகப்படுத்தவுள்ளன. இதனை சர்வதேச ஒலிம்பிக் குழுவும் உறுதிப்படுத்தியுள்ளது.

அதேபோல, கோடைகால பரா ஒலிம்பிக் போட்டிகள், எதிர்வரும் 2020ஆம் ஆண்டு, ஒகஸ்ட் மாதம் 25ஆம் திகதி முதல் எதிர்வரும் செப்டம்பர் 6ஆம் திகதி வரை டோக்கியோவில் நடைபெறவுள்ளது

டோக்கியோவில் உள்ள புதிய தேசிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்த போட்டித் தொடரில், 22 விளையாட்டுக்களில் இருந்து 540 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.

பகிரவும்...