Main Menu

ஜப்பானின் புதிய பிரதமரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று!

ஜப்பானின் அடுத்த பிரதமர் யார் என்பதை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது.

ஜப்பான் நாடாளுமன்றத்தில் உள்ள 535 உறுப்பினர்களும் 47 மாகாணங்களை சேர்ந்த ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகளும் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்யவுள்ளனர்.

ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் ஆட்சி அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவடையும் நிலையில், இன்று தெரிவு செய்யப்படும் தலைவர் ஓர் ஆண்டுக்கு கட்சியையும்ஆட்சியையும் வழி நடத்தவுள்ளார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பமியோ கிஷிடா, முன்னாள் இராணுவ அமைச்சர் ஷிகெரு இஷிபா மற்றும் ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலாளரும் ஷின்ஜோ அபேயின் விசுவாசியுமான யோஷிஹைட் சுகா ஆகியோர் பிரதமர் போட்டிக்கான களத்தில் உள்ளனர்.

இவர்கள் 3 பேரில் யோஷிஹைட் சுகாவுக்கு ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியினரிடையே செல்வாக்கு இருப்பதால் அவர் பிரதமராகத் தெரிவு செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஜப்பானைப் பொறுத்தவரையில் ஆளும் கட்சியின் தலைவர் பொறுப்பை வகிக்கும் நபரே நாட்டின் பிரதமராகவும் இருப்பார்.

அந்த வகையில் ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் தலைவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது.

ஜப்பானின் நீண்டகால பிரதமர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரரான ஷின்ஜோ அபே, தனது உடல் நலனை கருத்திற்கொண்டு அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்தார். எனினும் புதிய பிரதமரை நாடாளுமன்றம் தெரிவு செய்யும் வரை பதவியில் நீடிப்பேன் என அவர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...