Main Menu

ஜனாதிபதியின் கருத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த கருத்து தொடர்பாக வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

காணாமல் ஆக்கபட்டவர்கள் இல்லை என்றும் தம்மிடம் 8 பேர் மாத்திரமே கையளிக்கப்பட்டனர் என்றும் அண்மையில் ஜனாதிபதி தெரிவித்த கருத்து முற்றுமுழுதான பொய் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக, வவுனியாவில் கடந்த 1114 நாட்களாக சூழற்சிமுறைப் போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில் இன்று (சனிக்கிழமை) அவர்கள் நடத்திய ஊடகச் சந்திப்பிலேயே இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் கூறுகையில், “ஜனாதிபதி தெரிவித்தது முற்றுமுழுதான பொய்யான கருத்தாகும். நாம் உண்மையை சொல்லித்தான் போராடுகின்றோம். அவர்கள் பொய்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

சிங்கள பேரினவாத தலைவர்கள் எப்பொழுதும் தமது இனத்தையும் இராணுவத்தையும், பௌத்ததையும் பாதுகாப்பார்கள் என்பது 74 வருடகால அனுபவம். இதேவேளை, தமிழர்களால் தேர்தெடுக்கப்பட்ட கூட்டமைப்பும் இலங்கையைப் பாதுகாக்கிறது. இவர்கள் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்றே சிங்கள தேசம் விரும்புகின்றது. அப்போதுதான் ஒற்றையாட்சியையும் ஏக்கியராச்சியத்தையும் உருவாக்கலாம் என்பது அவர்களது விருப்பம்.

கூட்டமைப்பில் தமது பைகளை நிரப்பும் தலைவர்கள் பலர் உள்ளனர். இவர்கள் தமிழர்களுக்கு துரோகமே செய்கிறார்கள். இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் அடிமைகளாகவும், வீட்டுவேலைக்கும் வெளிநாடுகளுக்கும் விற்கப்பட்டிருக்கிறார்களா என்பதைக் கண்டறிய  வேண்டுமென்றால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் தேவை.

அந்த நாடுகள் வந்தால் தமிழர்களின் 72 வருடகால தாகம் தீரும். தமிழர்களுக்கு அபிவிருத்தி மாத்திரமே தேவை என்று ஜனாதிபதி கருத்துத் தெரிவித்திருக்கிறார். அவர் மீண்டும் வெற்றிபெற்றால் தமிழர்களுக்கு அபிவிருத்தியும் தேவையும் இல்லை என்றே கூறுவார்” எனத் தெரிவித்தனர்.

பகிரவும்...