ஜனவரியில் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும்- மத்திய அரசு
எதிர்வரும் ஆண்டு ஜனவரியில் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும் என இந்திய பள்ளி தேர்வு சான்றிதழ் சபை உத்தரவிட்டுள்ளது.
குறித்த அமைப்பின்கீழ், நாடு முழுவதும் ஏராளமான பள்ளிகள் செயற்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகள் அனைத்திலும் 10ஆம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்புகளை நடத்தும் வகையில் ஜனவரி 4ஆம் திகதிக்குள் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும் என்று இந்திய பள்ளி தேர்வு சான்றிதழ் சபை உத்தரவிட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக அவ்வமைப்பின் இயக்குநர் ஆராதோன், அனைத்து மாநில முதல் மந்திரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
குறித்த கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எங்கள் அமைப்பின் கீழ் செயற்படும் பள்ளிகள் அனைத்திலும் 10ஆவது, பிளஸ்-2 வகுப்புகள் ஜனவரி 4ஆம் திகதிக்குள் திறக்க வேண்டும். தற்போது இணையத்தின் ஊடாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
எனினும், மாணவர்கள் உரிய விளக்கங்களை பெறுவதற்கும், புராஜெக்ட், பிராக்டிகல் செய்வதற்கும் பள்ளிகளை திறந்தால்தான் முடியும். எனவே குறிப்பிட்ட காலத்திற்குள் பள்ளிகளை திறக்க வேண்டும். அதேநேரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்.
ஆசிரியர்களிடம் மாணவர்கள் நேரடியாக கேள்வி கேட்டு, விளக்கங்களை பெற்றால்தான் அவர்கள் தேர்வுக்கு தயாராக முடியும்” என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.