செனகலில் இருந்து ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு புறப்பட்ட படகு விபத்து: 140பேர் உயிரிழப்பு!
செனகலில் இருந்து ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு புறப்பட்ட படகொன்று விபத்துக்குள்ளானதில், 140பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
எம்பூரிலிருந்து சுமார் 200 பயணிகள் பயணித்த குறித்த படகு நகரத்தை விட்டு வெளியேறிய சிறிது நேரத்திலேயே தீப்பிடித்து கவிழ்ந்தது என்று சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
வடமேற்கு கடற்கரையில் செயிண்ட் லூயிஸுக்கு அருகில் படகு மூழ்கியதாகவும், சுமார் 60 பேர் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்பெயினின் கேனரி தீவுகள் வழியாக புலம்பெயர்ந்தோர் ஐரோப்பாவின் பிரதான நிலப்பகுதியை அடைய முயற்சிப்பதாக நம்பப்படுகிறது. மேற்கு ஆபிரிக்காவிலிருந்து இந்த பாதை 2018ஆம் ஆண்டு முதல் பிரபலமடைந்துள்ளது.
மேற்கு ஆபிரிக்காவிலிருந்து கேனரி தீவுகளுக்கு புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு நான்கு மடங்காக 11,000ஆக அதிகரித்துள்ளது.
663 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் செல்லும் பதினான்கு படகுகள் செப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்த பயணத்தை மேற்கொள்ள முயற்சித்தன. அவற்றில் பல படகுகள் விபத்தில் சிக்கி மூழ்கி உள்ளன.