Main Menu

சுதந்திரக் கட்சி குழப்பத்தில் உள்ளதாக தயாசிறி தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குழப்பத்தில் உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சிலர் சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டுமென்றும் இன்னும் சிலர் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட வேண்டும் என்றும் இன்னும் சிலர் தனியான கூட்டணி ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் கூறுவதாகவும் இதனாலேயே தமது கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் கூட்டணி அமைப்பதற்கு, பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னமே தடையாக இருக்கிறது.

மொட்டு அல்லது கை தவிர்ந்த வேறெந்த பொதுச் சின்னத்தையும் ஏற்றுக்கொள்வதற்கு சுதந்திரக் கட்சி தயாராக இருக்கிறது. ஆனால் எதிர்வரும் தேர்தல்களில் மொட்டு சின்னத்திலேயே போட்டியிடுவது என்பதில் பொதுஜன பெரமுன உறுதியாக இருக்கிறது.

இரு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி அமைப்பது குறித்து நடத்தப்பட்ட ஏழு சுற்றுப் பேச்சுக்களும் சாதகமானதாக, பயனுள்ளதாகவே இருந்தன.

சுதந்திரக் கட்சி கை சின்னத்தை விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறது. ஆனால் துரதிஷ்டவசமாக பொதுஜன பெரமுன மொட்டு சின்னத்தை கைவிட தயாராக இல்லை.

அவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை எம்முடன் கலந்துரையாடாமலேயே முடிவு செய்துள்ளனர்.

கட்சிகளுக்கிடையில் பேச்சுக்கள் நடந்துகொண்டிருந்தபோது எஸ்.பி.திசநாயக்கவையும் டிலான் பெரேராவையும் தமது கட்சியில் இணைத்துக்கொண்டமை இருதரப்பு பேச்சுக்களை பாதித்துள்ளது.

இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கட்சி குழப்பத்தில் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

பகிரவும்...