Main Menu

சீனாவைப் போன்ற வளர்ச்சியை இலங்கைக்கு கொண்டு வருவதே எனது குறிக்கோள் – ஜனாதிபதி

சீனா சிறந்த வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்வதனைப் போன்று இலங்கையையும் கொண்டு வருவதே எனது குறிக்கோள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அரசியல் பணியகத்தின் உறுப்பினரும்,வெளியுறவு ஆணையத்தின் இயக்குநருமான யாங் ஜீச்சி (Yang Jiechi)  தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழுவே இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்திருந்தது.

இந்த சந்திப்பிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தொடர்ந்தும் உதவியளிப்பதாக சீன உயர் மட்ட குழுவினர் இதன் போது தெரிவித்துள்ளனர்.

சீனா- இலங்கை இருதரப்பு உறவுகள் ஏற்கனவே மிகவும் திருப்திகரமான நிலையில் உள்ளன. இந்த நட்பைப் பேணுவதும் வளர்ப்பதும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் முன்னுரிமையாகும். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச அரங்கங்களில் இலங்கையின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றில் சீனா உறுதியாக நிற்கிறது என்றும் சீனக் குழு  இதன்போது ஜனாதிபதியிடம் தெரிவித்தது.

கடந்த பொதுத்தேர்தலில் ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் மகத்தான வெற்றியைப் பாராட்டிய யாங் ஜீச்சி,  35 ஆண்டுகளுக்கு முன்பு சீனக் குழுவுடன் மொழிபெயர்ப்பாளராக இலங்கைக்கு விஜயம் செய்ததை நினைவு கூர்ந்தார்.

தனது நான்கு நாடுகளின் ஆசிய சுற்றுப்பயணத்தில் இலங்கை முதல் நாடு என்றும், சீன ஜனாதிபதி இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்கு அதிக முன்னுரிமை அளித்துள்ளார் என்றும் அவர்  ஜனாதிபதியிடம் கூறினார்.

இதேவேளை தற்போதைய சீன- இலங்கை உறவுகளின் நிலையை ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ வரவேற்றார்.

மேலும் அதிகாரத்தில் உள்ள அரசாங்கங்களை வேறுபடுத்தாமல் இலங்கைக்கு ஆதரவளித்த நீண்டகால நண்பராக சீனாவை ஜனாதிபதி  வர்ணித்தார்.

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் சீனா முக்கிய பங்கு வகித்தது. யுத்தம் முடிவடைந்த பின்னர் இருதரப்பு உறவுகள் ஒரு புதிய நிலையை எட்டின. தீவின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு சீனா அளித்த பங்களிப்பை  ஜனாதிபதி  நினைவு கூர்ந்தார்.

பகிரவும்...