சிறையில் தந்தை, மகன் மரணம்: தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு நோட்டீஸ்
கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை, மகன் மரணமடைந்தது தொடர்பாக தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த தந்தை – மகன் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருவரின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் உயிரிழந்த ஜெயராஜின் மனைவி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தனது கணவர் ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸின் உடலை மருத்துவர்கள் குழு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த நீதிபதி புகழேந்தி, 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார், மேலும் பிரேத பரிசோதனையை விடியோவாக பதிவு செய்யப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது
அதில் தமிழக அரசின் முதன்மைச் செயலாளர், சிறைத்துறை ஏடிஜிபி ஆகிய இருவரும் இந்த சம்பவம் தொடர்பாக 4 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.