சிறைச்சாலை பதிவேடுகளை முழுவதுமாக கணினி மயமாக்க அமைச்சர் நிர்மல் குமார் உத்தரவு
புழல் மத்திய சிறையில் இன்று ஆய்வு மேற்கொண்ட எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், சிறைச்சாலை பதிவேடுகளை முழுவதுமாக கணினிமையமாக்க உத்தரவிட்டார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், “முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு பொறுப்பேற்ற பின்னர், அனைத்து துறைகளின் செயல்பாடுகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி, இன்று (24.05.2026) எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் சிறைத் துறையின் செயல்பாடுகள் குறித்து முதற்கட்டமாக புழல் மத்திய சிறைச்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்: சென்னை புழல் மத்திய சிறைச்சாலையில் சிறைத்துறை அதிகாரிகளுடன் இன்றைய தினம் ஆய்வு மேற்கொண்டோம். தமிழ்நாட்டில் மொத்தம் 13 சிறைச்சாலைகள் உள்ளன. அச்சிறைசசாலைகளில் உள்ள தண்டனைக் கைதிகள், விசாரணை கைதிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், சிறைச்சாலையில் உள்ள சமையல் கூடம், மருத்துவ வசதிகள், மருத்துவ உபகரணங்கள், குடிநீர் வசதி ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சிறை கைதிகளின் மருத்துவ அறிக்கைகளை முழுமையாக நவீனப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ நடவடிக்கைகளை வழங்கிடவும், சிறைச்சாலைகளில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறாத வண்ணம் மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள், கூடுதலாக கண்காணிப்பு கேமரா பொருத்துதல், சிறைச்சாலையில் உள்ள ஜெனரேட்டர் வசதியை மேம்படுத்துதல், சிறைச்சாலை பதிவேடுகளை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் போது, காவல் துறை தலைமை இயக்குநர் (சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள்) கே.சங்கர், காவல் துறை தலைவர் (சிறைகள் தலைமையிடம்) ஆர்.கனகராஜ் உட்பட சிறைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
