Main Menu

சிறுவன் சுர்ஜித் உயிருடன் மீட்கப்பட இறைவனை பிரார்த்திக்கிறேன் – ரஜினிகாந்த்

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சுர்ஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக ரஜினிகாந்த்தும் மீட்கும் பணி வெற்றி பெற வேண்டுமென கமல்ஹாசனும் குறிப்பிட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

அவனை மீட்கும் பணிகள் சுமார் 40 மணி நேரமாக நடைபெற்று வருகிறது. இன்று காலையில் இருந்து ரிக் இயந்திரத்தின் மூலம் பக்கவாட்டில் குழி தோண்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

ரிக் இயந்திரத்தின் மூலம் 100 அடி வரை குழி தோண்டும் முயற்சிகள் தொடர்கின்றன.  ஒரு ஆள் இறங்குமளவுக்கு ஒரு மீட்டர் அகலத்தில் இந்த குழி தோண்டப்பட்டு வருகிறது.

இன்று காலை 10 மணி நிலவரப்படி சுமார் 30 அடி வரை குழி தோண்டப்பட்டுள்ளது. 100 மீட்டர் அளவுக்கு தோண்டப்பட்டதும் இந்த குழிக்குள் கயிறு வழியாக இறங்கி குழந்தையை மீட்கவுள்ள தீயணைப்பு வீரர்கள் கண்ணதாசன், திலீப்குமார், மணிகண்டன் ஆகியோர் தயார் நிலையில் உள்ளனர்.  

ரிக் இயந்திரம் துளையிடும் காட்சி

சுர்ஜித் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆவலும் எதிர்பார்ப்புமாக உள்ள நிலையில், சுர்ஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக ரஜினிகாந்த்தும் மீட்கும் பணி வெற்றி பெற வேண்டுமென கமல்ஹாசனும் குறிப்பிட்டுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது வீட்டின் அருகே திரண்டிருந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்வதற்காக வெளியே வந்தார்.

சுர்ஜித் உயிருடன் நலமாக மீட்கப்பட வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்த ரஜினிகாந்த், ஆழ்துளை கிணறு விவகாரத்தில் பெற்றோர்கள் மற்றும் அரசு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார்.

மீட்பு முயற்சியில் அரசின் செயல்பாடுகளை குறைகூற முடியாது. கடந்த 36 மணிநேரத்துக்கும் அதிகமாக மீட்பு நடவடிக்கையில் அதிகாரிகள் விடாமுயற்சியுடன்  ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேபோல், சுர்ஜித்தை மீட்கும் பணி வெற்றி பெற வேண்டுமென கமல்ஹாசனும் குறிப்பிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‘ஆழ்துளைக் கிணற்றில் பள்ளம் தெரியாமல் சிறு குழந்தைகள் விழுவது ஒரு தொடர் அவலமாக தமிழத்தில் இருக்கிறது.

ஆபத்தில் இருக்கும் குழந்தையை மீட்கும் பணி வெற்றி பெற வேண்டும். ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல் விடுவதை குற்றமாகவும், அதற்கு பெருந்தொகையை அபராதமாகவும் அரசு விதிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

இதேபோல், ’நானும் ஒரு குழந்தையோட தகப்பன் அந்த வகையில என்னால சுர்ஜித் பெற்றோரின் வலியை உணர முடியுது.அந்த குழந்த உயிர் பொழச்சு வரணும். உன் தாய்ப்பால்ல வீரம் இருக்கு கண்ணு நிச்சயம் வருவ நீ.தம்பி நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான தீபாவளி.எழுந்து வா தங்கமே! .. வேதனையோடு ஒரு தீபாவளி’ என பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பகிரவும்...