Main Menu

சிந்து நதியில் படகு கவிழ்ந்து விபத்து- 30 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் உள்ள சிந்து நதியில் படகு கவிழ்ந்ததால் தண்ணீரில் மூழ்கி 30 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணம், தோர்கர் மாவட்டத்தின் நல அமேசாய் கிராமத்தில் இருந்து ஹரிபூர் மாவட்டத்தை நோக்கி நேற்று மாலை சிந்து நதியில் ஒரு படகு சென்றது. அதில் சுமார் 80 பேர் பயணித்தனர். அந்த படகு, தர்பெலா பகுதியில் சென்றபோது பாரம் தாங்காமல் ஆற்றில் மூழ்கியது. இதனால் படகில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று நள்ளிரவு நிலவரப்படி 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருந்தன. 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மற்றவர்களைத் தேடி வருகின்றனர். 

அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்றதால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 

பகிரவும்...