Main Menu

சிங்கள- பௌத்த கொள்கைகளுடனான ஆட்சியே நாட்டிற்குத் தேவை – சஜித்

சிங்கள- பௌத்த கொள்கைகளுடனான ஆட்சியே நாட்டிற்கு தற்போது தேவைப்படுவதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

மேலும், எவ்வாறான எதிர்ப்புகள் வந்தாலும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்குவது உறுதி என்றும் அவர் கூறினார்.

அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தெரிவிக்கையில், “இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நாட்டின் எதிர்க்காலத்தை தீர்மானிக்கும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால், நான் ஒரு விடயத்தை உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

அதாவது, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ ஆகிய நான் நிச்சயமாக வேட்பாளராக களமிறங்குவேன் என்பது மட்டும் உறுதியாகும். இதுதொடர்பாக இரண்டு பேச்சுக்களுக்கு இனிமேல் இடம் கிடையாது.

இந்த ஜனாதிபதித் தேர்தல் குறித்து மக்கள் தீர்மானங்களை எடுக்கும்போது சில விடயங்களை சிந்தித்துப் பார்க்க வேண்டும். விசேடமாக சுதந்திரமாக கருத்துக்களை முன்வைக்கும் நிலைமை, அச்சுறுத்தல் இன்றி வாழும் சூழ்நிலை என்பன தொடர்பாக மக்கள் சிந்திக்க வேண்டும்.

மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்குவதோடு, தேசிய பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும். இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே எமது பிரதான இலக்காகும். சிங்கள- பௌத்த கொள்கைகளுடனான ஆட்சியே இந்த நாட்டுக்கு இப்போது தேவைப்படுகிறது” என்று தெரிவித்தார்.

பகிரவும்...