Main Menu

சர்வதேச விவகாரம்: அரசாங்கத்தை எச்சரிக்கும் எதிர்க்கட்சி

சர்வதேச அரங்கில் ஒரு விடயத்தையும் உள்நாட்டு ஊடகவியலாளர் மாநாட்டில் மற்றொரு விடயத்தையும் கூறுவதானது நாட்டுக்குதான் பாதகமானதாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது ஹர்ஷண ராஜகருணா மேலும் கூறியுள்ளதாவது, “உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இதுவரை  நாடாளுமன்றத்தில்  சமர்பிக்கப்படவில்லை.

ஆகவே இவ்விடயம் தொடர்பாக  நாம் சபாநாயகரிடமும் விஷேட கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்க தவறியவர்களைப் போலவே, இதன் பின்னணியில் உள்ளவர்களும் திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

இதேவேளை கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது 69 இலட்சம் மக்களை ஏமாற்றுவதற்கு இது ஒரு சிறந்த காரணியாக அமைந்துள்ளது.

இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியமை கொரோனா சடலங்களை தகனம் செய்தல் அல்லது அடக்கம் செய்தல் விவகாரத்தில் தெளிவாகியுள்ளது.

சிங்கள பௌத்த வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கு ஒரு விடயத்தையும் சிறுபான்மை மக்களை ஏமாற்றுவதற்காக இன்னொரு விடயத்தையும் அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கிறது.

அதேபோன்று சர்வதேச அரங்கில் ஒரு விடயத்தையும் உள்நாட்டு ஊடகவியலாளர் மாநாட்டில் மற்றொரு விடயத்தையும் கூறுகின்றது.

மேலும், கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கூட அரசாங்கம் ஏமாற்றியுள்ளதா என்ற சந்தேகம் எழுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...