Main Menu

சஜித்தையே வேட்பாளராக நிறுத்தியாக வேண்டும்- மங்கள

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸாவை நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்ற நிலையில் மக்களின் விருப்பத்திற்கும் கோரிக்கைக்கமையவும் கட்சி முடிவெடுத்து அவரை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைக்கவேண்டுமென அமைச்சர் மங்கள சமரவீர யாழில் தெரிவித்துள்ளார்.

என்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கண்காட்சி நிகழ்வு இன்று  சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் மங்கள சமரவீர ரயிலில் யாழிற்குப் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.யாழ் ரயில் நிலையத்திற்கு சென்றபோது அமைச்சர் அங்கு ஊடகங்களுக்குக் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது:-

ஆளுங்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித்  பிரேமதாசாவை மக்கள் தெரிவு செய்த விட்டனர். அனே மக்களின் எதிர்பார்ப்பாகவும் சஜித்  பிரேமதாசாவே இருக்கிறார். அதே நேரத்தில் இனி அவரை கட்சி தான் அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்த பின்னர் அவரின் வெற்றிக்காகத் தொடர்ந்து உழைக்க  வேண்டும்.

குறிப்பாக சஜித்  பிரேமதாஸவிற்கு ஆதரவாக பதுளை மாத்தறை என கூட்டங்கள் நடைபெற்றிருக்கின்றது. இதில் மகிந்த ராஜபக்ஷவின் தொகுதியான குருநாகலிலும் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அங்கு வரலாற்றில் இல்லாதவாறு அதிக எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். அவ்வாறு செல்கின்ற இடமெல்லாம் =சஜித்  பிரேமதாஸவையே மக்கள் எதிர்பார்த்து அவருக்கே தமது அதரவையும் வழங்கி வருகின்றனர்.

மேலும் நான் புகையிரதத்தில் வருகின்ற போது இரு பக்கமும் அமைச்சர் சஜித்  பிரேமதாஸ முன்னெடுத்த திட்டங்கள் தொடர்பிலே பதாகைகளும் சுவர் ஒட்டிகளையும் காணக் கூடியதாக இருந்தது. அவ்வாறு அவர் மக்களுக்காகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் தான் மக்கள் அவரை எதிர்பார்க்கின்றனர்.

ஆகவே ஐ.தே.கவின் சார்பில் அமைச்சராக இருக்கின்ற அவரை மக்கள் தெரிவு செய்து விட்ட நிலையில் இனி அக்கட்சியினர் வேட்பாளரைத் தெரிவு செய்ய வேண்டியதில்லை எனத் தெரிவித்துள்ளார். 

பகிரவும்...