Main Menu

கொலம்பியாவில் குடியிருப்பின் மீது விழுந்து நொறுங்கிய விமானம்- 8 பேர் உயிரிழப்பு

கொலம்பியாவின் மெடலின் நகரில் உள்ள ஓலயா ஹெர்ரேரா விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை ஒரு சிறிய ரக விமானம் புறப்பட்டுள்ளது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் இயந்திரம் செயலிழந்து அருகில் இருந்த குடியிருப்பு பகுதியில் விழுந்து தீப்பிடித்தது. இதில் விமானத்தில் இருந்த 6 பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் உட்பட 8 பேரும் இறந்துள்ளனர். இந்த விபத்தில் ஏழு வீடுகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மற்றும் ஆறு கட்டிடங்கள் சேதமடைந்தன. வீட்டில் யாரேனும் காயமடைந்தார்களா அல்லது கொல்லப்பட்டார்களா என்பது பற்றிய எந்த தகவலும் இல்லை. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மெடலின் ஆண்டிஸ் மலைகளால் சூழப்பட்ட ஒரு குறுகிய பள்ளத்தாக்கு ஆகும். இதற்கு முன்னதாக 2016 ஆம் ஆண்டில், பிரேசிலின் சாப்கோயென்ஸ் கால்பந்து அணியை ஏற்றிச் சென்ற விமானம் எரிபொருள் தீர்ந்து நகருக்கு அருகிலுள்ள மலைகளில் விழுந்து நொறுங்கியதில் 16 வீரர்கள் உட்பட 71 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...