Main Menu

கொரோனா குறித்து சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம்- தமிழக சுகாதாரத்துறை

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்- விஜயபாஸ்கர் பேட்டி

கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சென்னை, தேனாம்பேட்டையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம். சீனாவில் கொரோனா பரவியதில் இருந்தே தனி பரிசோதனைப் பிரிவுகள் அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

சீனா, இத்தாலி, தென்கொரியா, ஜப்பானில் இருந்து வரும் பயணிகள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா பாதிப்பு உள்ளவரிடம் இருந்து மற்றொரு நபருக்கு பரவுவதை 100 சதவீதம் தடுத்து வருகிறோம். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்.

கொரோனா வைரஸ் எதிரொலியால் எல்லோருக்கும் முகக்கவசம் அணியும் நிலை ஏற்படவில்லை. இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் வந்த பிறகே கொரோனா பரவும் நிலை உள்ளது. இருமல், காய்ச்சல் மூச்சுத் திணறல் இருந்தால் உடனே அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.

மருத்துவ விதிகள் காரணமாக நோயாளி குறித்த துல்லியத் தகவல்களை வெளியிடவில்லை. தமிழகம் முழுவதும் 300 பரிசோதனைக்குத் தயாரான படுக்கை வசதிகள் தயாராகவுள்ளன, இதேவேளை, 10 இலட்சம் முகக் கவசங்கள் கையிருப்பில் இருக்கின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...