Main Menu

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்க 76 செல்வந்த நாடுகள் ஒன்றிணைவு

76 செல்வந்த நாடுகள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஒன்றிணைந்து செயலாற்றுகின்றன என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகின் பல நாடுகள் ஆராய்ச்சி நடத்தி வருகின்றன.

இந்நிலையில் 76 செல்வந்த நாடுகள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஒன்றிணைந்து செயலாற்றுகின்றன என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த ஒருமித்த தடுப்பு மருந்து பரிசோதனைக்கு ‘கோவாக்ஸ்’ பரிசோதனை எனப் பெயரிடப்பட்டுள்ளது. கோவாக்ஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு மூன்றாம் கட்ட சோதனைக்கு பிறகு வெற்றியடைந்தால், பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு இந்த தடுப்பு மருந்து குறைந்த விலைக்கு விற்கப்படும்.

மேலும் இந்த ஆராய்ச்சியில் பங்குகொண்ட நாடுகளுக்கு இலவசமாக இந்த தடுப்பு மருந்து வழங்கப்படும் என ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது.

76 நாடுகளின் தலைசிறந்த நோய்த்தொற்று விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இது நல்ல பலன் அளிக்கும் என உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஜப்பான், ஜேர்மனி, நோர்வே உள்ளிட்ட பல நாடுகளும் இந்த தடுப்பு மருந்து பரிசோதனைக்கு நிதி அளித்து வருகின்றன.

76 நாடுகள் பட்டியலில் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகள் இடம்பிடித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் கருத்துக்களுக்கு எதிர் கருத்து தெரிவித்து வருவதால், அமெரிக்கா இந்த நாடுகளுடன் ஒன்றிணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...