Main Menu

கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை! ஐ.நா வலியுறுத்தல்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவம் குறித்து, இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-எண்ட்ரே பிராஞ்ச் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள அறிக்கையில், இந்தத் துயரச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

சிறை அதிகாரிகள் அரசுக்கும் பொதுமக்களுக்கும் சேவை செய்வதில் சவாலான மற்றும் கடினமான கடமைகளை மேற்கொள்கின்றனர் எனச் சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை, அவர்களின் இழப்பு ஆழமாக உணரப்படுவதாகவும் கூறியுள்ளது.

அத்துடன், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கைதிகள் அரசின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பின் கீழ் இருந்தவர்கள் என்பதால், சிறைச்சாலை அமைப்பில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் அங்குள்ள கைதிகள் ஆகிய இரு தரப்பினருமே கூடுதல் பாதுகாப்பிற்கு உரித்துடையவர்கள் என்றும், அந்தப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசின் அடிப்படைப் பொறுப்பாகும் என்றும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் சிறைச்சாலை அமைப்பிற்குள் தொடர்ச்சியாக முதலீடுகளை மேற்கொள்வதன் அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்தியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள வதிவிட ஒருங்கிணைப்பாளர், சிறைச்சாலைகளில் காணப்படும் அதிகளவிலான நெருக்கடி, காலாவதியான நடைமுறைகள் மற்றும் தடுப்புக்காவல் நிலையங்களில் உள்ள வசதிக்குறைபாடுகள் ஆகியவை இலங்கையிலும் உலகளவிலும் உள்ள சிறைச்சாலை அமைப்புகளில் காணப்படும் பெரும் சவால்களாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இச்சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக சுயாதீனக் குழுவொன்று நிறுவப்பட்டதை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டுவதுடன், அக்குழுவினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வதிவிட ஒருங்கிணைப்பாளர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

சிறைச்சாலை பாதுகாப்பை வலுப்படுத்துதல், தடுப்புக்காவல் வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் சிறைச்சாலை ஊழியர்களின் நலனை உயர்த்துதல் ஆகியவற்றுக்காக, தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட தொடர்ச்சியான ஆதரவை இலங்கைக்கு வழங்கத் தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தனது அறிக்கையில் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.