Main Menu

கூட்டமைப்பின் கருத்தையும் மீறி தமிழர்கள் கோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர் – நாமல்

கூட்டமைப்பின் கருத்தினை மீறி தமிழ் மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்தோடு வடக்கு மக்களின் ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கிடைக்கப் பெற்றுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார்.

பழமையான அரசியல் செயற்பாடுகளில் இருந்து வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் இம்முறை மாற்றமடைந்துள்ளார்களென்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கில் நாங்கள் தோல்வி என்று கருத முடியாது. வெற்றிக்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் மற்றும் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பலமான அரசாங்கத்தினை தோற்றுவிப்பதற்கு வழிமுறைகளை ஜனநாயக முறையின் ஊடாக ஏற்படுத்தியுள்ளார்கள் என்றும் மக்கள் விரும்பும் ஆட்சி முறைமையினை உருவாக்குவதற்கு நாடாளுமன்றம் தொடக்கம் கிராமிய மட்டத்தில் முன்னெடுத்த முயற்சிகள் அனைத்தும் இன்று வெற்றிப்பெற்றுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையிலான அரசாங்கத்தினை உருவாக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பகிரவும்...