Main Menu

குருப்பெயர்ச்சி 2018 எந்த ராசிக்கு என்ன பலன்கள்?

குருபகவான் இப்போது வக்ரகதியில் இருக்கிறார். இன்னும் சில தினங்களில் வக்ர நிவர்த்தி அடைகிறார். துலாம் ராசியில் உள்ள குருபகவான் புரட்டாசி மாதம் 25ஆம் தேதியன்று அக்டோபர் 11ஆம் தேதியன்று விருச்சிகம் ராசிக்கு இடம் பெயர்கிறார்.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம். குருப்பெயர்ச்சிக்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கும் போதே பலன்கள் எழுத இப்போதே என்ன அவசரம் என்று யோசிக்க வேண்டாம்

தீபாவளிக்கு போக இப்போதே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது போல குரு பெயர்ச்சி பலன்களையும் படித்து முன்னதாகவே பரிகார தலங்களுக்கு செல்ல திட்டமிடுங்கள். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்களே அதிக பலனடையும்.

குரு பகவான் தெய்வீக அறிவுக்கும் வேதாந்த ஞானத்திற்கும், செல்வ வளத்திற்கும் பொருள் சேமிப்பிற்கும் காரணகர்த்தா. குரு பகவான் மாபெரும் சாதனைகளைச் செய்ய வைத்து மனிதனை மாணிக்கமாக திகழ வைப்பார். நாட்டை ஆளவைப்பார், நல்லோருடன் சேர வைப்பார்.

புது புது உத்திகளைக் காண வைப்பார் ஆன்மீக சுகத்திற்கு காரகராகவும் திகழ்கிறார். இந்த குரு பெயர்ச்சி ரிஷபம், கடகம், துலாம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனை தருகிறது.

இந்த குரு பெயர்ச்சி பலன்கள் பொதுவானதாகும். அவரவர்கள் ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பிற்கு தக்கவாறும் தற்சமயம் நடைபெறும் தசா-புக்திக்கு தக்கவாறும் உள்ள பலன்களே நடைபெறும்.

மேஷம் செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் துடிப்பாகவும் மிகுந்த வீரத்துடன் செயல்படுவீர்கள்.

மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் எதிலும் முதலிடத்தை பிடிப்பது ஒன்றே உங்களின் தலையாய நோக்கமாகும். வீரமும் தைரியமும் கோபமும் ஆக்ரோஷமும் ஒருங்கே அமையப் பெற்றுள்ளவர்கள் நீங்கள். வீர தீரம் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் அக்டோபர் மாதம் முதல் 8 ஆம் இடத்திற்கு செல்கிறார்.

அஷ்டமத்தில் குரு அவ்வளவாக நல்லதில்லை. ஆனாலும் குரு பகவான் பார்வை ராசிக்கு 12 ஆம் இடம் 2 ஆம் இடம் மற்றும் 4 ஆம் இடங்களின் மீது விழுவதால் பல நன்மைகள் நடக்கும். தனவரவு இருக்கும், சுக சந்தோஷங்கள் அதிகரிக்கும். சுப விரையங்கள் அதிகம் ஏற்படும்.

குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது பேச நேரம் ஒதுக்குங்கள் சண்டைகளை தவிர்க்கலாம்.சாப்பாட்டு விசயத்தில் கவனமாக இருந்தால் வயிறு கோளாறுகளையும், நோய்களையும் தவிர்க்கலாம். வியாழக்கிழமை குருபகவானுக்கு அர்ச்சனை செய்யலாம்.

ரிஷபம் சுக்கிரன் பகவான் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் மிகவும் மென்மையானவர்களாகவும் மற்றவர்களை அனுசரித்து நடக்க கூடியவர்களாகவும், வசீகரப் பேச்சினால் பிறரை கவரக் கூடியவர்களாகவும் இருப்பிர்கள்.

நினைத்த காரியத்தை செம்மையாக முடிக்கும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு 6 ஆம் இடத்தில் இருக்கும் குருபகவான் ராசிக்கு 7வது வீட்டில் அமர்வது சிறப்பான அம்சம்.

கல்யாண வயதில் உள்ள ஆண் பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும் மேலும் நின்று போன திருமணங்கள் இனி சுபமாக நடைபெறும். திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும். இது காதல் மலரக் கூடிய ஒரு காலம் ஆகும். காதல் உறவுகள் வலுப்படும்.

அதுவே திருமணத்தில் முடியக் கூடிய நல்ல நேரம் ஆகும். பொருளாதார உயர்வு இருக்கும், தீராத பிணிகளும் தீரும். நம்பிக்கையிழந்து வாழ்க்கையை ஓட்டியவர்களுக்கு எல்லாம் இனி எல்லாமும் சாத்தியம் தான் என்ற நம்பிக்கையை இந்த குரு பெயர்ச்சி கொடுக்கும்.

மிதுனம் புதன் பகவான் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் புத்தி கூர்மையுள்ளவர்களாகவும்,சகிப்பு தன்மையும்,பொறுமையும் உடையவர்களாகவும் எல்லா காரியங்களையும் திறமையாக செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர்களாகவும் இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு களத்திரம் மற்றும் ஜீவன ஸ்தான அதிபதியான குரு ராசிக்கு 6வது வீட்டில் அமர இருக்கிறார். 6 ஆம் இடம் சுப ஸ்தானம் இல்லை.

குரு பகவான் 10,12 ஆம் இடம் மற்றும் 2 ஆம் இட தன ஸ்தானத்தை பார்வையிடுகிறார். பணம் அதிகமாக வந்தாலும் சுப விரைய செலவுகள் ஏற்படும். திருமண வாய்ப்புகள் தாமதப்படும். தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை விரதம் இருந்து வழிபட நன்மைகள் அதிகம் நடக்கும். கடகம் சந்திரனின் ஆதிக்கம் பெற்றவர்கள் நீங்கள் உங்கள் ராசிநாதன் சந்திரன் பதினைந்து நாட்கள் வளர்பிறையாகவும், பதினைந்து நாட்கள் தேய்பிறையாகவும் உலவி வருவார். குருபகவான் இதுநாள் வரை உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் உள்ள குருபகவான் அக்டோபர் மாதம் முதல் 5வது வீட்டிற்கு செல்கிறார். குருபகவான் ராசியை பார்வையிடுகிறார்.

ராசிக்கு 9ஆம் இடம், 11வது இடத்தையும் பார்வையிடுகிறார் குருபகவான். காதல் கனியும் காலம், திருமண வாய்ப்புகளும் கைகூடி வரும். வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை அணிந்து குருபகவானை வழிபடலாம். சிம்மம் சூரியனை ஆட்சி நாதனாகக் கொண்ட

சிம்ம ராசிக்காரர்களே… உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் இருந்த குருபகவான் அக்டோபர் மாதம் முதல் ராசிக்கு 4வது வீட்டில் அமரப்போகிறார். குருபகவான் ராசிக்கு 8ஆம் இடம், 10ஆமிடம், 12வது இடத்தையும் பார்வையிடுகிறார்.

வீட்டில் சின்னச் சின்ன சண்டைகள் ஏற்படும். காதல், திருமண விசயங்களில் அவசரப்பட வேண்டாம். வேலைப்பளு அதிகரிக்கும். கடன் வாங்கவோ,கொடுக்கவோ வேண்டாம். தென்திட்டையில் எழுந்தருளும் குருபகவானை வணங்க நல்லதே நடக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது அவசரப்படாமல் ஆலோசனை செய்து முடிவு செய்யவும்.

கன்னி புதன் பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட புத்திசாலித்தனம் கொண்ட கன்னி ராசிக்காரர்களே. உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் தன ஸ்தானத்தில் அமர்ந்துள்ள குருபகவான், முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டில் அமர உள்ளதால் சிறு சிறு பயணங்கள் ஏற்படும்.

வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்திருந்த குரு 3வது இடத்திற்கு செல்வதால் வார்த்தைகளில் கவனம் தேவை. குரு பகவான் ராசிக்கு 7வது வீடு, 9வது வீடு 11வது இடத்தை பார்வையிடுகிறார். இந்த குரு பெயர்ச்சியினால் வேலைப்பளு ஏற்பட்டாலும் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும், கடன் தொகை வசூலாகும்.

துலாம் அன்பும், காதல் உணர்வும் கொண்ட துலாம் ராசி நேயர்களே… இது நாள் வரை உங்கள் ராசியில் இருந்த குரு பகவான் அக்டோபர் மாதம் முதல் உங்கள் ராசிக்கு 2வது வீடான தன ஸ்தானத்திற்கு செல்கிறார்.

குரு பகவான் ராசிக்கு 6வது இடம் 8வது இடம், 10வது இடத்தை பார்வையிடுகிறார். குரு பெயர்ச்சியினால் வீட்டில் அமைதி நிலவும், உல்லாச பயணம் செல்லக்கூடிய நேரம், சிலருக்கு பணி செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும், பதவி உயர்வுகள் கிடைக்கும். வியாழக்கிழமையன்று ஏழைகளுக்கு அன்னதானம் கொடுக்கலாம்.

விருச்சிகம் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே.

இதுநாள் வரை உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் இருந்த குருபகவான், அக்டோபர் மாதம் முதல் ராசிக்குள் வந்து அமர்கிறார். உங்கள் ராசிக்கு 5வது வீட்டிலும், 7வது வீட்டிலும், 9வது வீட்டிலும் குருவின் பார்வை விழுகிறது. பொறுப்புகளும், கடமை உணர்வுகளும் அதிகரிக்கும். பணவரவு கிடைக்கும்.

குடும்பத்தில் பலரும் அனுசரணையாக இருப்பார்கள். குரு பகவானை வியாழக்கிழமைகளில் சென்று வணங்கி வரலாம். குரு 5ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 5மிடத்தை பார்ப்பபதால் திருமணமான தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் கிட்டும். உங்கள் குழந்தைகளின் மேல் படிப்பிற்காக செலவுகள் அதிகரிக்கும்.

தாய் வழியில் தன வரவு வரும். எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். குரு 7ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 7மிடத்தை பார்ப்பதால் வியாபாரம், கூட்டு தொழில், நண்பர்கள் மூலம் நல்ல உறவு ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

தனுசு அறிவாற்றலும், திறமையும் கொண்ட தனுசு ராசிக்காரர்களே இதுநாள் வரை உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் இருந்த குரு பகவான், ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். சுப விரைய செலவுகள் ஏற்படும். குரு பகவான் 4 ஆம் இடம் 6 ஆம் இடம் மற்றும் 8 ஆம் இடத்தை பார்க்கிறார். பண வரவுக்கு பஞ்சமில்லை அதே போல சுப விரைய செலவுகளும் அதிகம் ஏற்படும்.

வாழ்க்கைத்துணையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். காதல் விவகாரங்கள் கை கூடுவதில்லை கொஞ்சம் ஒத்திப்போடவும். அவ்வப்போது உடல் களைப்பு ஏற்படும் என்பதால் சத்தான உணவுகளை சாப்பிடவும். உங்கள் ராசிக்கு 4 ம் வீடு பூமி வீடு,வாகனம் சுகம் கல்வி,தாய் ஆகிய ஸ்தானங்களை குரு பார்ப்பதால் அதன் அடிப்படையில் யோகங்கள் வரும்.சகல காரியங்கள் சித்தி பெறும்.

உங்கள் ராசிக்கு 6ம் பாவத்தை குரு பார்ப்பாதல் கடன் சுமை குறையும்.நோய் நொடி நீங்கும். தொழில் அபிவிருத்தி உண்டாகும். வர வேண்டிய தொகைகள் வந்து சேரும். உங்கள் ராசிக்கு 8ம் பாவத்தை குரு பார்ப்பதல் வழக்கு வெற்றிகள் சாதகமாகும். பயம் நீங்கும்.

எதிர்பாராத வகையில் பண வரவு வரும். காலங்கள் மாறும் காட்சிகள் மாறும். குருபகவானை சரணடைய நல்லதே நடக்கும்.

மகரம் உங்கள் ராசிக்கு 10ம் பாவத்தில் சஞ்சாரம் செய்த குரு பகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு 11ம் வீடான லாப ஸ்தானமான சிம்மத்தில் சஞ்சரிக்க உள்ளார்.

11ம் பாவம் என்பது மூத்த சகோதரர்கள், வித்தை, லாபம், நட்பு, மன ஆசைகள் நிறைவேறுதல் ஆகியவற்றை குறிக்கும் இடமாகும். உங்கள் ராசிக்கு 11ம் பாவத்தில் குரு வரும் பொழுது முழுமையான யோகத்தைச் செய்யும் என்பது பழமையான ஜோதிட நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.

உங்கள் ராசிக்கு 3ம் பாவத்தை குரு 5ம் பார்வையாக பார்ப்பாதல் வீரம்,போகம் துணிவு துணைவர் பலம், ஆயுள்பலம், எல்லா காரியங்களிலும் வெற்றி பெற செய்வார். உங்களுடைய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். திட்டங்கள், ஆசைகள் கனவுகள் எல்லாம் நிறைவேறும். குழந்தைகள் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். லாப ஸ்தானத்தில் உள்ள குருபகவானால் பதவி உயர்வு கிடைக்கும் ஆரோக்கியம் மேம்படும். உற்சாகம் அதிகரிக்கும்.

கும்பம் ராசிக்கு 9ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 10 ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 2 ஆம் இடம் 4 ஆம் இடம் மற்றும் 6 ஆம் இடத்தை பார்வை இடுகிறார்.

பத்தாமிடத்து குரு ஈசனார் ஒரு பத்திலே தலையோட்டிலே இரந்துண்டது என்பது பாடல். கடந்த காலத்தில் குரு 9ல் நல்ல இடத்திலிருந்து நன்மைகளை அடைந்தவர்கள் பத்தில் குரு கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்ற நிலையையும் உருவாகும். குரு பகவான் 5ம் பார்வையாக 2மிடமான வாக்கு வித்தை குடும்ப ஸ்தானத்தை பார்க்க போவதால் சொன்ன சொல்லை காப்பாற்றலாம்.

குடும்பத்தில் சந்தோஷங்களைப் பார்க்கலாம். குடும்ப தேவைக்காக புதிய பொருட்களை வாங்கலாம். எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யுங்கள். பத்தில் உள்ள குரு பதவியை ஒன்றும் நாசம் செய்ய மாட்டார் கவலை பட வேண்டாம். நன்மையே நடக்கும்.

மீனம் இது வரை உங்கள் ராசிக்கு 8ல் இருந்த குரு இப்பொழுது ராசிக்கு 9ம் இடத்திற்கு மாற இருக்கிறார். உங்கள் ராசி நாதனான குருவே உங்கள் ராசியை பார்க்கிறார். அது மிகவும் நல்லது. அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி, ஓடிப் போனவனுக்கு ஓன்பதில் குரு என்பார்கள். உங்கள் ராசி நாதன் குரு 5ம் பார்வையாக உங்கள் ராசியை பார்க்க போவதால் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும்.

உங்களுக்கு முன்னேற்றமும் வளர்ச்சியும் யோகமும் வந்து சேரும். குரு 7ம் பார்வையாக. ராசிக்கு 3 ம் இடத்தை பார்க்க போவதால் தைரியமாக எல்லா காரியங்களிலும் இறங்கி வெற்றி பெறலாம். தைரியத்தையும், தன்னம்பிக்கை தந்து வளமான வாழ்வு உண்டு.

பொதுவாக எல்லா ராசி அன்பர்களும் குரு பெயர்ச்சிக்கு பரிகாரமாக ஆலங்குடி சென்று குருவுக்கு பிரீதி செய்வதும், திருச்செந்தூர் சென்று கடலில் குளித்து முருகப் பெருமானை வழிபாடு செய்து வர நல்ல பலன்கள் கிடைக்கும்.

பகிரவும்...