Main Menu

கார்கில் வெற்றி இந்தியாவின் வலிமையின் அடையாளம்: மோடி

கார்கில் வெற்றி இந்தியாவின் வலிமையின் அடையாளமென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கார்கில் போரின் 20ஆம் ஆண்டையொட்டி நடைபெற்ற கார்கில் வெற்றி தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மோடி மேலும் கூறியுள்ளதாவது, “கார்கில் வெற்றி இந்தியாவின் வலிமை, மன உறுதி, திறன் ஆகியவற்றின் அடையாளம்.

போர்கள் அரசாங்கத்தால் நடத்தப்படுவது அல்ல. ஆனால் ஒட்டுமொத்த தேசத்தால் நடத்தப்படுவது.

அந்தவகையில் கார்கில் வெற்றி இன்னும் ஒட்டுமொத்த தேசத்தையும் கவர்ந்ததாகவே உள்ளது. இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியனின் வெற்றி.

பாகிஸ்தான் 1999ஆம் ஆண்டு கார்கில் வழியாக தவறான முறையில் எல்லையை மறுவரையறை செய்ய முயற்சித்தது.

ஆனால் இந்திய பாதுகாப்பு படைகள் அந்த தீய எண்ணத்தை முறியடித்தது. போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் நான் கார்கிலுக்கு சென்றேன். அது எனக்கு ஒரு யாத்திரை போல இருந்தது.

தேசத்தின் பாதுகாப்பு எந்த தாக்குதலுக்கும் அசைந்து கொடுக்காது. இப்போதும் அதேபோன்று தொடர்கிறது.

ஆகையால் இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றுக்கு இடையே கூட்டு முயற்சியை உறுதி செய்வதற்கான நேரம் வந்துள்ளது.

மேலும் தேசம் பாதுகாப்பாக இருந்தால்தான் வளர்ச்சி காண்பது சாத்தியமாகும்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பகிரவும்...