கேரள முதல்வராகப் பதவியேற்றார் வி.டி. சதீசன்
காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன், ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் மாநிலத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணியை (UDF) மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவந்து இன்று (18) கேரள முதலமைச்சராகப் பதவியேற்றார்.
மூத்த காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணிக் கட்சிகள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்னிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
சதீசன் தனது முழு அமைச்சரவையுடன் பதவியேற்றார்.
இதன் மூலம், கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளில் முதல் முறையாக, முதலமைச்சருடன் முழு அமைச்சரவையும் ஒரே நேரத்தில் பதவியேற்றது.
ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியின் அங்கங்களான, கேரள காங்கிரஸைச் சேர்ந்த மூத்த கூட்டணித் தலைவர் மான்ஸ் ஜோசப் மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியைச் (RSP) சேர்ந்த ஷிபு பேபி ஜான் ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணியை (LDF) தோற்கடித்து ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) மீண்டும் ஆட்சிக்கு வந்ததையடுத்து, இந்தப் பதவியேற்பு விழா கேரள மாநிலத்தில் ஒரு பெரிய அரசியல் மாற்றத்தைக் குறித்தது.
2026 சட்டமன்றத் தேர்தலில் 140 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டமன்றத்தில், ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது.
காங்கிரஸ் 63 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, அதே நேரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) 22 இடங்களை வென்றது.
இடது ஜனநாயக முன்னணி (LDF) 35 இடங்களையும், பாஜக மூன்று தொகுதிகளைக் கைப்பற்றியது.
