Main Menu

கறுப்பு பட்டியுடன் நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினர்!

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இன்று கறுப்பு பட்டியுடன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தனர்.

இதன்போது மரண தண்டனை கைதி  பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் மேற்கொள்வதற்கும் அவர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இருப்பினும் நீதிமன்றத்தால் சத்தியப் பிரமாணம் செய்ய அனுமதிக்கப்பட்டார் என்ற அடிப்படையில் எதிர்க்கட்சிகளின் ஆட்சேபனைகளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நிராகரித்தார்.

குற்றம் சாட்டப்பட்டமரணதண்டனை கைதியான பிரேமலால் ஜெயசேகர இன்று கூட்டத்தில் கலந்து கொள்ள நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதனை அடுத்து பிரேமலால் ஜெயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

நாடாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்த பின்னர் அவரை சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.

நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரேமலால் ஜயசேகர, சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என சட்டமா அதிபர் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணி ரிட் மனுவொன்றை மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், இந்த மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், பிரேமலால் ஜயசேகரவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கான அனுமதியை வழங்குமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கு உத்தரவிட்டது.

கடந்த மாதம் பிரேமலால் ஜயசேகரவை அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு சிறைத்துறைக்கு முன்னர் நாடாளுமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் அவரை நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ள சிறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதைத் தடுக்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கஹவத்த பகுதியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தமை மற்றும் பலர் காயமடைந்த சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் கடந்த ஜூலை மாதம் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...