கமல்ஹாசனுக்கு ஜெயகுமார், கனிமொழி கண்டனம்
கரை வேட்டி கட்டுபவர்களை கறை படிந்தவர்கள் என்று கமல் கூறியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கரை வேட்டி கட்டுபவர்களை கறை படிந்தவர்கள் என்று கமல்ஹாசன் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசும்போது குறிப்பிட்டார்.
இது கரை வேட்டி அதிகமாக கட்டும் அ.தி.மு.க., தி.மு.க.வினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
கமல் ‘இன்ஸ்டன்ட் சாம்பார்’ மாதிரி. திடீரென கருத்து கூறுவார். திடீரென காணாமல் போய் விடுவார்.
தேர்தல் நேரத்தில் மட்டும் வருவார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று விடுவார். அந்த நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீரழிவு. அந்த வீடே அலிபாபா குகை போல் உள்ளது. வீட்டில் உள்ளவர்கள் பயந்து வெளியில் ஓடி வருகிறார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு தடை கோர முடியுமா? என்கிறீர்கள். திருடனாய் பார்த்துதான் திருந்த வேண்டும். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். மூலம் ஆள் மாறாட்டத்தை தொடங்கியவர் கமல். கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் அரசியல் பேசுவது தவறு.
இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
அரசியலில் திடீர் திடீரென வந்து புதிய கருத்துக்களைக் கூறும் அனைவருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. தமிழகத்திற்கு வளர்ந்த நாடுகளுக்கு போட்டியாக இருக்கக் கூடிய பெருமை உள்ளதென்றால் அதற்கு தி.மு.க. எனும் பேரியக்கமும், கரை வேட்டி கட்டிய கலைஞர் என்ற தமிழர் உருவாக்கிய பெருமையும்தான். அதனை யாரும் மறுத்து விட முடியாது. அரசியல் தெரிந்தவர்களுக்கு தான் கரை வேட்டியின் அருமை தெரியும்.
இவ்வாறு கனிமொழி கூறினார்.