Main Menu

கட்சியின் தலைமைப் பதவியிலிருந்தும் விலகும் ரணில் – ஐ.தே.க. பொதுச் செயலாளர் அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தயாராக உள்ளார் என கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க.வின் தலைமையகமான சிரிகொத்தவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துக்களைப் பரிசீலிப்பதாகவும் அதன்படி கட்சியின் பதவி நிலைகளில் இருந்து எதிர்காலத்தில் விலகுவதாகவும் ரணில் விக்ரமசிங்க திட்டவட்டமாகத் அறிவித்தார் என அகில விராஜ் காரியவசம் கூறினார்.

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றதும் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ரணில் விக்ரமசிங்க அண்மையில் பிரதமர் பதவியை ராஜினாமாச் செய்திருந்தார். இதனை அடுத்து இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டதுடன் மஹிந்த ராஜபக்சவும் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்குமாறு ஒருதரப்பினரும் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்குமாறு இன்னொரு தரப்பினரும் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதேநேரம் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியைத் தழுவ ரணில் விக்ரமசிங்கவே காரணம் என ஒரு தரப்பினர் குற்றம் சாட்டியதுடன் அவரை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...