Main Menu

ஒப்பந்தம் செயலிழப்பு – ரஷ்யா மட்டுமே பொறுப்பு – அமெரிக்கா

அணு ஆயுத ஒப்பந்தம் செயலிழந்துள்ளமைக்கு ரஷ்யா மாத்திரமே பொறுப்பு என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

ஐ.என்.எப். ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா நேற்று(வெள்ளிக்கிழமை) முழுமையாக வெளியேறியது.

இந்தநிலையில் இதுகுறித்து கருத்து வெளியிடும் போதே அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ரஷ்யா ஒப்பந்தத்தின் விதிகளை மீறியதை, எங்கள் நேட்டோ நட்பு நாடுகளோடு கலந்து ஆலோசித்து தீர்மானித்த பிறகே நாங்கள் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி இருக்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளார்.

அணு ஆயுத பயன்பாட்டை கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் இடையே கடந்த 1987-ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.

நடுத்தர தொலைவு அணு ஆயுதங்கள் உடன்படிக்கை (ஐ.என்.எப்.) என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம், நிலத்தில் இருந்து ஏவப்படும் சிறிய மற்றும் நடுத்தர தூர அணு ஆயுத ஏவுகணைகளை இரு நாடுகளும் பயன்படுத்த தடை விதிக்கிறது.

கடலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை இது கட்டுப்படுத்தாது. அத்துடன், இரு நாடுகளும் எதிர்த்தரப்பின் ஆயுதங்களை சோதிக்க இந்த ஒப்பந்தம் பரஸ்பரம் அனுமதி வழங்குகிறது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் இருநாடுகளிலும் இருந்த சுமார் 2,700 ஏவுகணைகள் 1991-ம் ஆண்டு அழிக்கப்பட்டன. இந்த சூழலில் கடந்த 2002-ம் ஆண்டு கண்டம்விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்துவதை தவிர்க்கும் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது.

இதையடுத்து ஐ.என்.எப். ஒப்பந்தம் ரஷியாவின் நலன்களை பாதுகாக்கவில்லை என ரஷ்ய ஜனாதிபதி புடின் 2007-ம் ஆண்டு பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதனை தொடர்ந்து ரஷ்யா ஐ.என்.எப். ஒப்பந்தத்தை மீறுவதாகவும், ஒப்பந்தத்தில் தடை செய்யப்பட்ட 500 முதல் 5,500 கி.மீ. தூரம் பாயும் புதிய ஏவுகணையை உருவாக்கியுள்ளதாகவும் அமெரிக்கா குற்றம் சுமத்தியது.

இந்த விவகாரத்தில் இரு நாடுகள் இடையே தொடர்ந்தும் மோதல் நீடித்து வந்த நிலையில், ரஷ்யா உடனான ஐ.என்.எப். ஒப்பந்தத்தை இரத்து செய்வதாக கடந்த பெப்ரவரி மாதம் டிரம்ப் அறிவித்தார்.

நாங்கள் மட்டும் இந்த ஒப்பந்தத்தை ஒருதலைபட்சமாக கடைப்பிடிக்க முடியாது என கூறிய அவர், 6 மாதத்தில் அதில் இருந்து முழுமையாக வெளியேறப்போவதாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில் ஐ.என்.எப். ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா நேற்று முழுமையாக வெளியேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...