Main Menu

ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் போராட்டத்திற்கு ஆயத்தம்!

வேலையில்லா பட்டதாரிகளுக்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய உடனடியாக நியமனங்களை வழங்குமாறு கோரி போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன் ஜனாதிபதியின் பெயரில் விநியோகிக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்திற்கு எதிராகவும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கம் அறிவித்துள்ளது.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் அனைத்து வேலையற்ற பட்டதாரிகளின் கலந்துரையாடலின் பின்னர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த  ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தன்னே குணானந்த தேரர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு முரணாக நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது.

குறித்த புதிய நியமனங்களை பெரும்பாலும் அரசாங்க கட்சி சார்ந்தவர்களுக்கே வழங்கவுள்ளமை தொடர்பாக சந்தேகம் எழுகின்றது. காரணம் புதிய ஜனாதிபதியின் பெயரில் பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் ஒரு விண்ணப்பப்படிவம் பட்டதாரிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகும்.

மேலும் கடந்த அரசாங்கத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்காக 57,000 வரையான வேலையில்லாப் பட்டதாரிகள் தோற்றியுள்ளதுடன் இரண்டு நேர்முகத் தேர்வுகளுக்கும் சமூகமளித்து எமது பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதற்கான தேர்வு மாவட்ட செயலகத்தின் ஊடாகவும் பிரதேச செயலகம் ஊடாகவும் இடம்பெற்றுள்ளதுடன் அதற்காக நிதியும் நேருமும் எமது பட்டதாரிகளால் செலவிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த தேர்வுகளில் அரசாங்கம் சிலருக்கு மாத்திரமே வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் ஏனைய வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலையை பெற்றுக்கொடுப்பதில் புதிய அரசாங்கம் தற்போது முறைகேடாக நடக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.

கடந்த அரசாங்கம் வேலையில்லாப் பட்டதாரிகள் 20,000 பேருக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் அளிப்பது தொடர்பாக அமைச்சரவையில தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அரசாங்கம் பாரபட்சமாக செயற்பட்டமை போன்று இந்த அரசும் ஈடுபடக்கூடாது.

நாடு பூராகவும் 54 ஆயிரத்திற்கும் அதிகமான வேலையில்லாப் பட்டதாரிகள் தற்போது இருக்கின்றனர். அவர்களுக்கு நியமனங்களை வழங்குமாறு கோரி கடந்த 2 வருடங்களுக்கு மேலாக போராட்டங்களை நடத்தி வருகின்றோம்.

அதன் விளைவாக 16,800 பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குவதாக கடந்த அரசாங்கம் அறிவித்ததுடன் அவர்களில் முதற்கட்டமாக 12,133 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன. இந்த நியமனங்களின் போதும் பட்டதாரிகள் உள்வாரி வெளிவாரி என பிரிக்கப்பட்டமையினால் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. இதன்போது அதிகளவில் உள்வாரிப் பட்டதாரிகளுக்கே நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. பட்டதாரிகளை அவ்வாறு பாகுபடுத்தாமல் அனைவருக்கும் நியமனங்கள் முறையாக வழங்கப்பட்ட வேண்டும்.

ஆகவே இந்த நடவடிக்கைகள் உரிய வகையில் நடைபெற வேண்டும் என்பதுடன் அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிடின் நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதை தெரிவிக்க விரும்புகின்றோம்” என கூறினார்.

பகிரவும்...