ஐ.நா.பிரேரணையிலிருந்து அரசு விலகிவிடும்; சர்வதேச உறவில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது – ஜி.எல்.பீரிஸ்
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் பிரகாரமான பொறுப்புக்கூறல் கடப்பாட்டிலிருந்து இலங்கை முழுமையாக விலகிக்கொள்ளும். எதிர்வரும் மார்ச் கூட்டத்தொடரில் அரசாங்கத்தின் நிலைப்பாடு முழுமையாக இதுவாகவே காணப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய தேசிய கட்சியை 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு உதவி புரிந்த சர்வதேச அமைப்புக்கள், மேற்குலக நாடுகளை திருப்திப்படுத்தும் விதமாகவே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டு வரப்பட்டது. இப்பிரேரணைகளுக்கு கடந்த அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சர் பதவி வகித்த முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பாராளுமன்றத்திற்கும் அறிவிக்காமல் பொறுப்பு கூறல் விடயத்திற்கு தான்தோன்றித்தனமாக இணக்கம் தெரிவித்தார்.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கம் பொறுப்பு கூறலை முன்னெடுக்க வேண்டிய தேவை கிடையாது. ஏனெனில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் சர்வதேசத்தில் எமது நாட்டு இறையாண்மையினை காட்டிக் கொடுப்பதாகவே கருதப்படும்.எமது நாட்டுக்கு முற்றிலும் மாறுப்பட்ட விதமாகவே பிரேரணையின் உள்ளடக்கங்கள் காணப்படுகின்றது.
பொறுப்பு கூறல் விடயத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வகையில் அழுத்தங்களை சர்வதேச மட்டத்தில் இருந்து பிரயோகித்தாலும் அது பயனளிக்காது. எந்த உடன்படிக்கைகளுக்கு இணக்கம் தெரிவித்தும் புதிய அரசாங்கம் தோற்றுவிக்கப்படவில்லை. என்பதை அனைவரும் புரிந்துக் கொள்ளல் அவசியமாகும்.
நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளில் இருந்து அரசாங்கம் விலகிக் கொள்ளும் நிலைப்பாட்டிலே அரசாங்கம் உள்ளது. மனித உரிமை பேரவையில் பிரேரணையினை கொண்டு வந்த அமெரிக்கா பல்வேறு குற்றச்சாட்டுக்களை மனித உரிமை பேரவைக்கு எதிராக முன்வைத்து விலகிக் கொண்டது.பொறுப்புக் கூறல் விடயத்தில் இருந்து அரசாங்கம் விலகிக் கொள்வதால் சர்வதேச உறவுகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.அனைத்து நாடுகளுடனும் நல்லுறவினை தொடர்ந்து பேணுவோம் என்றார்.