ஐபோனை விற்று மகிழுந்து வாங்கிய சிறுவன் கைது
Aude மாவட்டத்தில் தனது ஐபோனை விற்று மகிழுந்து ஒன்றை வாங்கிய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். இச்சம்பவம் சனிக்கிழமை மாலை Carcassonne (Aude) நகரில் இடம்பெற்றுள்ளது. மாலை 4.20 மணி அளவில், முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் போது Peugeot 206 வகை மகிழுந்து ஒன்றை சிறுவன் ஒருவன் செலுத்தி வருவதை பார்த்துள்ளனர். சிறுவனை நிறுத்தும் படி பணித்தபோது, சிறுவன் மகிழுந்தில் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளான். ஆனால் சில நிமிடங்களில் சிறுவன் வீதி ஒன்றையின் முனைக்குள் சிக்குண்டு தொடர்ந்து பயணிக்க முடியாமல் சிக்கிக்கொண்டான். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், மகிழுந்தை சோதனையிட்டனர். மகிழுந்தை செலுத்தி வந்தது 15 வயதுடைய சிறுவன் எனவும், அவனுடன் 13 வயதுடைய சிறுவன் ஒருவனும் பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது. தவிஅர மகிழுந்துக்குள் சிறிய மின்சார வண்டி ஒன்றும் இருந்து, அதன் இலக்கத்தகடுகள் மறைக்கப்பட்டு இருந்துள்ளது. விசாரணைகளில், குறித்த சிறுவன் ’பேஸ்புக்கில்’ விளம்பரம் ஒன்றை பார்த்துவிட்டு 300 யூரோக்களுக்கு குறித்த மகிழுந்தை வாங்கிக்கொண்டு வந்துள்ளதாகவும், பணத்துக்கு பதிலாக தனது ஐபோன் 8 தொலைபேசியை ‘மாற்றீடாக’ கொடுத்துவிட்டு, மகிழுந்தை வாங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளான். கைது செய்யப்பட்ட குறித்த சிறுவன், பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளான். சிறுவர்களுக்கான நீதிபதி (le juge des enfants) இது தொடர்பான விசாரணைகளை விரைவில் மேற்கொள்ளுவார்.