Main Menu

உலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக நவோமி ஒசாகா சாதனை

ஜப்பானின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகா, உலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனை என்ற சாதனையை பதிவு செய்துள்ளார்.

உலகின் பிரபலமான ஃபோர்ப்ஸ் சஞ்சிகை ஆண்டுத்தோறும் உலகின் அதிக வருவாய் ஈட்டும் 10 விளையாட்டு வீராங்கனைகளை பட்டியலிடும்.

2019ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் முதல் 2020ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் திகதி வரையிலான வீரர்களின் பரிசுத் தொகை, விளம்பர ஒப்பந்த வருமானம் போன்றவற்றைக் கொண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஆண்டு வருமானத்தை மதிப்பிடும்.

அந்தவகையில் இந்த பட்டியலில், முன்னாள் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான 22 வயதான நவோமி ஒசாகா, 37.4 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டி முதலிடம் பிடித்துள்ளார். இதன்மூலம் கடந்த வருடம் முதல் இடத்தில் இருந்த செரீனா வில்லியம்ஸைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

இந்த வருடம் செரீனாவின் வருமானத்தை விடவும் ஒசாகா, 1.4 மில்லியன் டொலர் அதிகமான வருமானம் ஈட்டியுள்ளார்.

கடந்த வருடம், உலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் நான்காவது முறையாக முதலிடத்தைப் பிடித்தார். அவரது ஆண்டு வருவாய் 29.2 மில்லியன் என்று மதிப்பிடப்பட்டது. இந்த வருடம் செரீனா வில்லியம்ஸ் 36 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டியுள்ளார்.

அத்துடன், இதுவரை எந்தவொரு விளையாட்டு வீராங்கனையும் ஓர் ஆண்டில் 37.4 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டியதில்லை. இதன்மூலம் ஒசாகா புதிய சாதனையை பதிவு செய்துள்ளார்.

இதற்கு முன்பு கடந்த 2015ஆம் ஆண்டு ரஷ்ய வீராங்கனையான மரியா ஷரபோவா 29.7 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டியதே சாதனையான இருந்தது. அந்தச் சாதனையை ஒசாகா தற்போது முறியடித்துள்ளார்.

1990ஆண்டு முதல் டென்னிஸ் வீராங்கனைகளின் வருமானத்தை ஃபோர்ப்ஸ் சஞ்சிகை மதிப்பிட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான முழுப் பட்டியலில் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளது.

உலகின் 10ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா, இரண்டு முறை கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.

2018ஆம் ஆண்டு அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலும், 2019ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிலும் சம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...