Main Menu

உண்மையைக் கண்டு பயம் கொள்வதால் என்னை கைது செய்யக் கோருகின்றனர் – விக்னேஸ்வரன்

தன்னைக் கைதுசெய்ய வேண்டுமென தென்னிலங்கையில் கோரிக்கை விடுக்கப்படுவது அவர்களுடைய உள்ளெண்ணங்களை படம்பிடித்துக் காட்டுகிறது என வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையில் உங்களுக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக உங்களைக் கைது செய்ய வேண்டுமென்று கோரி வருவதை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள் என ஊடகவியலாளரால் கேட்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், “என்னிடம் கேள்வி ஒன்று தரப்பட்டது. அந்தக் கேள்விக்கான பதிலை நான் ஆங்கிலத்தில் எழுதி அனுப்பினேன். அவற்றைப் பத்திரிகைகள் பிரசுரித்தன. அதன் காரணமாக அதை பொதுமக்கள் வாசித்து தென்னிலங்கையிலே முக்கியமாக சிங்கள மக்கள் கொதிப்படைந்திருக்கின்றார்கள், கோபம் கொண்டுள்ளார்கள் என்று தெரிகின்றது.

இதிலே கோபம் கொள்ள வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. நான் கூறுவது எனக்குத் தெரிந்த வரலாற்றின் அடிப்படையிலேயே நான் அறிந்து கொண்ட தரவுகளிலிருந்து அந்த கருத்துக்களை வெளியிட்டிருக்கிறேன்.

என் கருத்துக்கள் பிழையென்று யாராவது நினைத்தால் அதற்கான மாற்றுக்கருத்துக்களை அவர்கள் தரலாம். நான் கூறியிருப்பது உண்மையென்பது என்னுடைய கருத்து. உண்மையைக் கண்டு அவர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் அந்த உண்மை வெளிவந்தால் தாங்கள் இதுவரை காலமும் பொய்மையை எவ்வாறு வெளிப்படுத்தி வந்தார்களோ அந்த பொய்மை அழிந்துவிடும் என்றதொரு ஏக்கத்தில் அவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்களோ என நான் அறியேன்.

ஆனால் எது எவ்வாறாக இருப்பினும் நான் கூறுவது உண்மையென்றால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். அது பிழை என்றால் அவர்கள் அதற்குத் தோதான எதிர்க் கருத்துக்களைத் தரவேண்டும். அல்லது நான் கூறியவை பொய் என்று அவர்கள் நினைப்பதால் ‘நாங்கள் அதைப் பற்றி எதுவுமே பேச வேண்டிய அவசியம் இல்லையே’ என்று வாதாடாதிருக்கலாம்.

இவற்றையெல்லாம் விட்டுவிட்டு அவர்கள் என்னை கைது செய்ய வேண்டும் என்று கூறுவது அவர்களுடைய உள்ளெண்ணங்களை படம்பிடித்துக் காட்டுகிறது.

ஏதோவொரு பயத்தினால், அதாவது தங்களுடைய கபடங்கள் வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தின் நிமிர்த்தமாக அவர்கள் இவ்வாறு நடந்துகொள்கிறார்களோ என்று என்னை எண்ண வைக்கின்றது.

ஆகவே இவ்வாறான கைதுகளும் என்னை விமர்சிப்பதும் தேவையற்றது என்று தான் நான் பார்க்கின்றேன். ஒருவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்துவது ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு விடயம். நான் வன்முறையைச் சார்ந்து கருத்துக்களை வெளிப்படுத்தவில்லையே. ஆனால் உண்மையை தொடர்ந்து நான் கூறிக்கொண்டு தான் வருவேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...