Main Menu

ஈரானில் 5300 கோடி பீப்பாய் கச்சா எண்ணையுடன் புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிப்பு

ஈரானில் 2400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 5300 கோடி பீப்பாய் கச்சா எண்ணையுடன் புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார்.

உலகளாவிய அளவில் பெட்ரோல், டீசல் உற்பத்திக்கு தேவையான கச்சா எண்ணெய் வளம்கொண்ட நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள ஈரான் பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் என்ற அமைப்பை உருவாக்கியது.

சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளை உள்ளடக்கிய இந்த அமைப்பு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெட்ரோலிய பொருட்களுக்கான விலையை நிர்ணயித்து வருகிறது.

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் குறைந்து விட்டதால் சமீபகாலமாக ஈரான் தனது நாட்டின் பெட்ரோல் உற்பத்தியை வெகுவாக குறைத்துக் கொண்டுள்ளது.

இந்நிலையில்,ஈரானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குசேஸ்தான் மாகாணத்தில்  2400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 5300 கோடி பீப்பாய் கச்சா எண்ணையுடன் புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஹசன் ரவுகானி இன்று தெரிவித்துள்ளார்.

80 மீட்டர் ஆழத்தில் கச்சா எண்ணெய் சுரக்கும் இந்த பெட்ரோல் வயல் தொடர்பான கண்டுபிடிப்பை ஈரான் மக்களுக்கு அரசு அளிக்கும் பரிசு எனவும் ரவுகானி குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...