Main Menu

இஸ்ரேல் மீது சிரியா ஏவுகணை தாக்குதல்- பீரங்கி தாக்குதல் மூலம் பதிலடி

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஆட்சி செய்யும் ஹமாஸ் அமைப்பினர் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். பதிலுக்கு இஸ்ரேலும் வான்வழி தாக்குதல் நடத்துகிறது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்கரை பகுதியில் சில நாட்களுக்கு முன்பு அல்-அக்சா மசூதிக்குள் இஸ்ரேல் போலீசார் நுழைந்து பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹாஸ் போராளிகள் இஸ்ரேல் நகரங்கள் மீது குண்டுகளை வீசினர். இதனால் காசா முனை மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. மேலும் லெபனானில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் அங்கிருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இதனால் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது இன்று அதிகாலை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. 6-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள், இஸ்ரேலின் வடகிழக்கு பகுதி நோக்கி வீசப்பட்டது. இஸ்ரேல் வான்பாதுகாப்பு அமைப்பு நடுவானில் சுட்டு வீழ்த்தியது. ஒரே ஒரு ஏவுகணை மட்டும் இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்து கோலன் குன்றுகளில் உள்ள ஒரு வயலில் விழுந்தது. இதில் உயிரிழப்புகளோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை. இந்த தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் சிரியாவில் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாத குழு தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. சிரியாவில் இருந்து ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே மேற்கு கரையில் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 வயது பாலஸ்தீனியர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்ரேல் ராணுவத்தினர் மீது கற்கள், வெடிபொருட்களை வீசிய பாலஸ்தீனியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

பகிரவும்...