Main Menu

இலங்கை வலைபந்தாட்ட அணி பொட்ஸ்வானா பயணம்

இங்கிலாந்தின் லிவர்பூல் உள்ளக அரங்கில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை வலைபந்தாட்டக் குழாம், முன்னோடி பயிற்சிப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக பொட்ஸ்வானாவுக்கு எதிர்வரும் 21ஆம் திகதி பயணமாகவுள்ளது.

அங்கு பொட்ஸ்வானா தேசிய அணியுடன் 3 போட்டிகளிலும் இளையோர் அல்லது கழக மட்ட அணியுடன் 3 போட்டிகளிலும் விளையாடவுள்ளதாக அணி முகாமையாளரும் இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவியுமான ட்ரிக்ஸி நாணயக்கார தெரிவித்தார்.

 இப் போட்டிகள் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 30ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

பொட்ஸ்வானா செல்லும் இலங்கை வலைபந்தாட்ட வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகளுக்கான விமானப் பயணச் சீட்டுகளை வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச வைபவ ரீதியாக நேற்று கையளித்த வைபவம் செத்சிரிபாயாவில் நடைபெற்றது.

ஆசிய வலைபந்தாட்டப் போட்டிகளில் சம்பியனான இலங்கை வலைபந்தாட்ட அணி வீராங்கனைகளுக்கு சொந்த வீடுகளை வழங்கிய அமைச்சர் சஜித் பிரேமதாச, அப்போது வழங்கிய உறுதிமொழிக்கு அமைய பொட்ஸ்வானாவுக்கான விமானப் பயணச் சீட்டுகளை வழங்கியதாக தெரிவித்த ட்ரிக்ஸி நாணயக்கார, அதற்காக அணி சார்பில் தனது நன்றியையும் வெளியிட்டார்.

பொட்ஸ்வான செல்லும் இலங்கை அணிக்கு சத்துரங்கி ஜயசூரய தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவுஸ்திரேலியாவில் தொழில்சார் கழக வலைபந்தாட்டப் போட்டிகளில் விளையாடிவரும் தர்ஜினி சிவலிங்கம் விரைவில் நாடு திரும்பி இலங்கை அணியுடன் பொட்ஸ்வானா பயணமாவார்.

நான்கு குழக்களில் 16 நாடுகள் பங்குபற்றும் உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, வட அயர்லாந்து, ஸிம்பாப்வே ஆகிய நாடுகளுடன் குழு ஏயில் இலங்கை இடம்பெறுகின்றது.

உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிகள் லிவர்பூலில் உள்ள இரண்டு உள்ளக அரங்குகளில் எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதிமுதல் 21ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

பகிரவும்...