Main Menu

இலங்கை புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்தாலும் பெற்றுக்கொள்ளும் பயன்கள் தொடர்பில் திருப்தி இல்லை

விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி ஆகிய துறைகளினூடாக மனித இனத்திற்கு தீங்கு விளைவிக்கும் கண்பிடிப்புக்களை தவிர்த்து, மனித இனத்திற்கு நன்மை பயக்கும் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவமளிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார். 

நேற்று (21) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கையின் தொழிநுட்ப புரட்சி “ஷில்பசேனா” கண்காட்சியின் நிறைவு வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். 

விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி தொடர்பான தகவல்களை சமூகமயப்படுத்தும் நோக்கில் விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த 18 ஆம் திகதி இக்கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

புதிய தொழிநுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட 12 தலைப்புகளின் கீழ் 04 நாட்களாக இடம்பெற்ற இக்கண்காட்சியில் பாடசாலை மாணவ, மாணவிகள் மற்றும் புதிய படைப்பாளிகளின் புதிய படைப்புகள் உள்ளடங்கிய உற்பத்திகூடமொன்றும் பாடசாலை மாணவ, மாணவிகளின் அறிவை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள், கல்வியமைச்சின் பங்களிப்பால் நடாத்தப்படும் விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் புத்தாக்கத் துறைகளுடன் தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய வகையில் இக்கண்காட்சி இடம்பெற்றது. 

மேலும் தொழிற்பயிற்சி வாய்ப்புகள், தொழில் முயற்சியாளர்களுக்கான வாய்ப்புகள், தொழிற்சந்தை, விற்பனைக்கான பல்வேறு பொருட்கள் ஆகியன அடங்கிய வர்த்தககூடங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், நடமாடும் சேவைகள் போன்றவையும் இக்கண்காட்சியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

கண்காட்சியின் நிறைவு வைபவத்தில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்த போதிலும் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பயன்கள் தொடர்பில் திருப்தியடைய முடியாது என குறிப்பிட்டார். 

நாட்டை முன்னேற்றுவதற்கு விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி துறைகளை வலுவூட்டுவதும் அவற்றுக்குத் தேவையான வசதிகளை குறைவின்றியும் வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். 

மேலும் விஞ்ஞான மற்றும் தொழிநுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட பாட விதானங்களை உருவாக்க வேண்டியது கல்வியியலாளர்களின் பொறுப்பாகுமென்றும் அதனூடாக வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வளித்து அபிமானமிக்க தொழிற்துறையினர்களாக நாட்டின் இளைஞர், யுவதிகளை சர்வதேச தொழிற்சந்தையை வெற்றிகொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 

அதனைத்தொடர்ந்து ஜனாதிபதி கண்காட்சியைப் பார்வையிட்டார். 

விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுஜீவ சேனசிங்க, இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன ஆகியோரும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

பகிரவும்...