Main Menu

இலங்கை தற்கொலை படை தீவிரவாதி சென்னையில் சிலரைச் சந்தித்ததாகத் தகவல்!

லங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதி சென்னையில் சிலரை சந்தித்ததாக வெளியான தகவலை அடுத்து பூந்தமல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 
ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 253 பேர் உயிரிழந்தனர்.

ஜஹ்ரன் ஹாசிம் என்ற பயங்கரவாதி தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நிலையில், 
தீவிரவாதி ஹாசிமின் கூட்டாளியான ஹசன் என்ற தீவிரவாதியின் விவரங்கள் தற்போது கிடைத்துள்ளன.

இலங்கையில் தற்கொலை படை தாக்குதல் நடத்தி பலியான பயங்கரவாதிகளில் ஹசனும் ஒருவனாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இந்த நிலையில் பயங்கரவாதி ஹசன் தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை மண்ணடிக்கு வந்து சென்றதாக தகவல் தேசிய புலனாய்வு அமைப்புக்கு கிடைத்தது.

இதையடுத்து பயங்கரவாதி ஹசன் யாரை சந்தித்தான் என உளவு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மண்ணடியில் ஒரு நபரை பிடித்து விசாரித்ததில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் சென்னை பூந்தமல்லியில் இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து பூந்தமல்லியில் சென்னை – பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள கோல்டன் அடுக்குமாடி குடியிருப்பில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அந்த குடியிருப்பின் 11-வது மாடியில் வசித்து வரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பயங்கரவாதி ஹசன் சந்தித்த நபர்கள் இவர்களாக இருக்கலாம் என சந்தேகிப்பதால் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஐஎஸ் அமைப்போடு தொடர்புடையவர்கள் சிலர் தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருப்பதால் இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் தமிழகத்திலும் இருக்கிறார்களா என சந்தேகம் எழுந்துள்ளது.

பகிரவும்...