Main Menu

இரட்டைக் குடியுரிமையால் புலம்பெயர் அமைப்புக்களும் நாடாளுமன்றம் வரலாம்- எச்சரிக்கிறார் ஞானசாரர்

விடுதலைப் புலிகளின் பிரிவினைவாதக் கொள்கையானது உலகம் முழுவதும் வியாபித்துள்ளது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே  ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புலம்பெயர் அமைப்பினரும் அதிகளவில் இரட்டைக் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர் என்றும் பிரபாகரனால் செய்ய முடியாதை நாடாளுமன்றத்தில் தமது பலத்தை உருவாக்குவதன் மூலம் அவர்களால் செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குச் சென்றிருந்த ஞானசார தேரர், ஊடகங்களுகக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டில் பிரதான இரு கட்சிகளும் ஆட்சியமைக்கும்போது தங்களுக்குத் தேவையான விதத்தில் அரசியமைப்பினை திருத்தம் செய்கிறார்கள் என தெரிவித்துள்ள அவர், இதனால் அரசாங்கத்துக்கு நன்மை ஏற்பட்டதே தவிர நாட்டுக்கு எவ்வித அபிவிருத்திகளோ மாற்றங்களோ ஏற்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அரசியமைப்பின் 17ஆவது திருத்துக்கு ஆதரவு வழங்கிய அரசியல்வாதிகள் 18ஆவது திருத்திற்கும், 19 ஆவது திருத்திற்கும் ஆதரவு வழங்கினார்கள் எனவும் அரசியமைப்பின் 19ஆவது திருத்தம் கடந்த காலங்களில் அரச மற்றும் சமூக மட்டத்தில் பிரதான பேசுபொருளாக காணப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

எனினும், 19ஆவது திருத்தத்தை ஆதிரித்த அரசியல்வாதிகள் அரசியல் தேவைகளுக்காக அதனை எதிர்க்கவும் ஆரம்பித்தார்கள் எனக் குறிப்பிட்ட அவர், அது அரசியல்வாதிகளுக்கே உரித்தான தனித்துவ இயல்பு என்றார்.

இதேவேளை, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை இரத்துச்செய்து புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதாக ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கிய நிலையில் தற்போது 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆனால், இந்தத் திருத்தத்தில் இரட்டைக் குடியுரிமையினைக் கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியும் என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், விடுதலைப் புலிகள் நாட்டில் இல்லாதொழிக்கப்பட்டாலும் அவர்களின் பிரிவினைவாதக் கொள்கையானது உலகம் முழுவதும் வியாபித்துள்ளது எனத் தெரிவித்துள்ள அவர், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் அரசியலில் பங்குப்பற்ற முடியும் என்பதை புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் நிச்சயம் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சீனர்கள், இந்தியர்களும் எதிர்காலத்தில் இலங்கை நாடாளுமன்றில் உறுப்பினராக செயற்படுவார்கள் என்பதில் எவ்வித ஆச்சரியமும் கிடையாது என்ற நிலையில் அரசாங்கம் இரட்டைக் குடியுரிமை விவகாரத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பகிரவும்...